Viral

போதையில் திருமணத்துக்கு வந்த மணமகன்; பெண்ணின் தந்தை எடுத்த அதிரடி முடிவு: விருந்தாளிக்கு அடித்த ஜாக்பாட்!

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை குடி போதையில் ஆட்டம் ஆடியதால் மணப்பெண்ணின் தந்தை எடுத்த முடிவால் திருமண வீட்டில் பரபரப்பு தொற்றியது.

மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபுர் பங்க்ரா கிராமத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த திருமண விழாவின் போது மணமகன் போதையில் இருந்ததால் கல்யாணம் நடப்பது தாமதமாகியிருக்கிறது.

அதன்படி, திருமணம் நடத்த மாலை 4 மணிக்கு நேரம் குறிக்கப்பட்ட போதும் மணமகன் மணமேடைக்கு வராமல் இருந்திருக்கிறார். இதனால் மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார் உட்பட உறவினர்கள் இரவு 8 மணி வரை காத்திருந்திருக்கிறார்கள்.

8 மணிக்கு பிறகு முழு போதையில் மணமகன் வந்ததை கண்டு ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை, குடிகாரனுக்கு என் பெண்ணை கட்டி வைக்க முடியாது எனச் சொல்லியிருக்கிறார்.

இதனால் கல்யாண வீடு கலவரமாகியிருக்கிறது. இருதரப்புக்கும் இடையே பரஸ்பரம் மோதல் வெடித்ததால் உடனடியாக திருமணத்துக்கு விருந்தினராக வந்த தனது உறவுக்கார மகனை அழைத்து பெண்ணுக்கு கட்டி வைத்து அதிரடி காட்டியிருக்கிறார் அந்த தந்தை.

இதனைக் கண்ட அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். பொதுவாக இது போன்ற சம்பவங்கள் சினிமா படங்களிலேயே வருவது வழக்கம்.

அண்மைக்காலமாக 90களில் பிறந்த கல்யாணம் ஆகாதவர்களை நெட்டிசன்கள் இது போன்று திருமண விழாவுக்கு சென்றால் மணமகனுக்கு மாற்றாக உங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிட்டும் என பதிவிட்டு வருவார்கள்.

இப்படியாக திரையிலும், சமூக வலைதளங்களிலும் கேள்விப்பட்டது உண்மையிலேயே நடந்திருப்பது காண்போரை ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Also Read: மகனை விடுவிக்க கேட்டு வந்த பெண்ணிடம் மசாஜ் செய்ய கூறிய பீகார் போலிஸ்.. காவல்நிலையத்தில் நடந்த அவலம்!