Viral

பொங்கல் பண்டிகைக்கு இப்படி ஒரு விருந்தா? வருங்கால மாப்பிள்ளையை தரமாக கவனித்த பெண் வீட்டார்!

பொங்கல் பண்டிகையை ஆந்திராவில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், கோதாவரி மாவட்டத்தில் வருங்கால மருமகனுக்கு பெண் வீட்டார் வகை வகையாக உணவு தயாரித்து விருந்து வைத்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீமாவரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ், மாதவி ஆகியோரின் மகள் குந்தவி. இவருக்கும், தும்மலப்பள்ளியைச் சேர்ந்த சாய் கிருஷ்ணாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், பெண் வீட்டார் சாய் கிருஷ்ணாவுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விருந்து வைத்துள்ளனர்.

அந்த விருந்துக்காக ஓட்டல்களில், திருமணங்களில் கூட இல்லாத வகையில் தடபுடலாக பல்வேறு வகைகளில் உணவு, இனிப்பு பலகாரங்கள் தயார் செய்துள்ளனர். அதன்படி 365 வகைகளில் உணவுகளை தயாரித்திருக்கிறார்கள். இந்த யோசனைக்கு குந்தவியின் தாத்தா பாட்டியான கோவிந்த், நாகமணிதான் காரணமாம்.

இதனையடுத்து வருங்கால மாப்பிள்ளையான சாய் கிருஷ்ணாவை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கே இத்தனை அசத்தலான விருந்தாக இருந்தால் திருமணத்தை இன்னும் அசத்தலாக நடத்துவார்கள் என அப்பகுதி மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. மேலும், இந்த நிகழ்வு குறித்த வீடியோ, போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.