Viral

‘முழுசா சந்திரமுகி ஆகிவிட்ட கங்காவ பாருங்க..’ : ஓ.பி.எஸ். மகனின் லெட்டர் பேடில் மோடி படம்- # Viral photo

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் எடப்பாடி அரசில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் எம்.பி. ஆகியோர் ஒருபடி மேலே போய் மோடியின் அதிதீவிர விசுவாசிகளாக தங்களை காட்டிக் கொள்வது அனைவருக்கும் தெரிந்ததே.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு தேனியில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஓ.பி.ரவீந்திரநாத்குமார் எம்.பி., தன்னை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரராகவே காட்டிக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் காவித்துண்டு அணிந்து மேடையில் தோன்றிய ரவீந்திரநாத்குமார், "கடந்த ஆண்டு, இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான்தான் தொடங்கிவைத்தேன். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஊர்வலத்தைத் தொடங்கிவைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு பேசும்போது, மோடியே அடுத்த பிரதமராக வருவார் எனக் கூறினேன். அதேபோல அவரே பிரதமராக வந்துவிட்டார்.

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுவருகிறார். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது…” என்று கூறி தன்னை ராஜவிசுவாசத்தை மிஞ்சிய விசுவாசி என்று காட்டிக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத்குமாரின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் விவாதத்தையும் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற ஓ.பி.ரவீந்திரநாத்குமார், "நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்" என்று கூறினார். இதற்கும் இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

இதுஇப்படி இருக்க, தற்போது ரவீந்திரநாத்குமாரின் லெட்டர் பேட் ஒன்று இணையவெளியில் உலா வருகிறது. இதில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் படத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது.

இந்த லெட்டர் பேடு, அ.தி.மு.க., தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகும் இந்த லெட்டர் பேடு புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. சந்திரமுகி படத்தில் வருவது போல், கங்கா முழுமையா சந்திரமுகி ஆனதை பாருங்க என்று நெட்டிசன்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.‘