Viral

“கணவர் அதீத காதலைப் பொழிகிறார்... வாழ்க்கையே நரகமாக இருக்கிறது” : விநோத காரணத்தால் விவாகரத்து கேட்ட பெண்!

கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாத காரணத்தாலும், கால நேரத்திற்கு ஏற்றாற்போல் குடும்ப சூழலை புரிந்துகொள்ளாத காரணத்தாலும் உலகெங்கும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் விநோதமான புகார் ஒன்றைக் கூறி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார் ஒரு பெண். விவாகரத்து மனுவில் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்ததாவது, திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில், இது வரை என் கணவர் என்னை மிகவும் கனிவாகவும், அன்புடனும் கவனித்துக் கொள்கிறார்.

என் மீது அளவுகடந்த காதலைச் செலுத்துகிறார். என்னிடம் ஒருபோதும் கோபம் கொண்டது இல்லை. வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்கிறார். எனக்குத் தேவையான அனைத்தையும் எனக்குப் பிடித்தவாறே செய்கிறார்.

அவரது உடல் எடை அதிகமாக இருப்பதால் என் பேச்சைக் கேட்டு டயட் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனால் அவரது காலில் எலும்பு முறிவுதான் ஏற்பட்டது. அதற்கும் அவர் என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை.

திருமணம் ஆன நாள் முதல் இதுவரை எங்கள் இருவருக்குள்ளேயும் எவ்வித விவாதங்களும், சண்டைகளும் இல்லாமல் இருப்பது ஏதோ நரகம் போல் உள்ளது என அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

தன் மனைவி தொடுத்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெறச் சொல்லி நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கல்யாணம் ஆன ஒரு ஆண்டுக்குள் விவாகரத்து என்பது முறையற்ற முடிவு. செய்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்புத் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, கணவன், மனைவி இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு தந்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது புஜைராவில் உள்ள ஷரியா நீதிமன்றம்.