Viral

“மதுரை ஆதரவற்றோர் காப்பகத்தில் 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்”- ‘கொடூர’ நிர்வாகி கைது!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் (வயது41) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இந்த காப்பகத்தில் 25க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆட்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்குச் சென்ற புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் அந்த காப்பகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அங்கிருந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், 4 சிறுமிகள்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. காப்பக நிர்வாகிகளில் ஒருவரான, ஆதிசிவன் பலமுறை அவரது அலுவலகத்தில் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் சிறுமிகள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 4 சிறுமிகளும் வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். மற்ற சிறுமிகளும் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்படும் நடவடிக்கை நடந்து வருகிறது.

இதுகுறித்து குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கிரேஸ் ஷோபியாபாய் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகி ஆதிசிவனை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக, மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆதரவற்றோர் காப்பகத்தில் சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.