புயல் சேதப்பகுதியில் சிரித்துக் கொண்டே செல்பி எடுக்கும் பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் மகாஜன்.
Viral

புயல் சேதங்களை பார்வையிடும் போது சிரிப்பு ‘செல்ஃபி’- ஈவு இரக்கமற்ற பா.ஜ.க அமைச்சரின் கீழ்தரமான செயல்!

மகராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகராஷ்டிரா மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் கடும் சேதம் ஏற்பட்டது. இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை.

பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. பல இடங்களில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கிராமங்களும் சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. மகாராஷ்டிராவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஒன்றான சங்கிலியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த படகு கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் வெள்ளச்சேதங்களை பார்வையிட அம்மாநில அமைச்சர் கிரிராஜ் மகாஜன் படகு மூலம் சென்றார். அவர் படகில் செல்லும் போது செல்ஃபி மூலம் வீடியோக்களையும், படங்களையும் எடுத்துத் தள்ளினார். அவர் சிரித்துக் கொண்டே கையசைத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோக்களும், படங்களும் வைரலாகி வருகின்றன.

அமைச்சர் மகாஜன் பார்வையிடச் சென்ற மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல போன இடத்தில் அவர்களின் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் சிரிப்பு செல்ஃபி எடுத்துக் கொண்ட அமைச்சரின் ஈவு இரக்கமற்ற செயலுக்கு நாடெங்கிலும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

மனிதநேய உணர்வே இல்லாத அமைச்சர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.