Viral

திருமணம் வரை சென்ற ஃபேஸ்புக் காதல் - காதலனின் நிஜ முகம் தெரிந்ததால் மருத்துவ மாணவி தற்கொலை!

ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சதீஷ்குமார் என்பவரோடு ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ் குமார் தன்னை பொறியாளர் என்று இந்துமதியிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவர்களின் நட்பு ஃபேஸ்புக் வழியாகவே காதலாக உருமாறியிருக்கிறது. பின் கடந்த ஆண்டு வீட்டுக்குத் தெரியாமால் இந்துமதி, சதீஷ்குமாரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பெற்றோரிடம் கல்லூரி விடுதியில் தங்கியுருப்பதாக கூறி, தனியாக வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், திருமணமான சில நாட்களுக்கு பிறகு தான் இந்துமதிக்கு சதீஷ்குமாரின் உண்மை முகம் தெரியவந்துள்ளது. சதீஷ்குமார் பொறியாளர் அல்ல எலக்ட்ரீசியன் என்பது இந்துமதிக்கு தெரியவந்துள்ளது. ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு கிடப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்றும் சதீஷ்குமார் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். ஃபேஸ்புக்கில் காதலில் விழுந்து தன் வாழ்க்கையை தானே ஏமாற்றிக்கொண்ட விரக்தியில், சதீஷ் குடிபோதையில் உறங்கிக் கொண்டிருக்கும் போதே, இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அக்கம்பக்க வீட்டில் இருப்பவர்கள் இந்துமதி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மது போதையில் இருந்து தெளியாத சதிஷ்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இந்த செய்தியறிந்த இந்துமதியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்துமதிக்கு திருமணமான விஷயமே அவர்களுக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சதிஷ்குமாரே அடித்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் எனவும் இந்துமதியின் தந்தை சுப்பிரமணியன் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். கொலையா, தற்கொலையா என்ற இரு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.