Viral

ட்ரெண்ட் ஆகிவரும் ‘Vacuum Challenge’ : ரிஸ்க் எடுக்கும் சமூக வலைதள மக்கள்!

சமூக வலைதளங்கள் என்பவை தொலைத்தொடர்பிற்காக உருவாக்கப்பட்டவை. சமூக வலைதளங்களில் பெரும்பாலானவை செயலிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவையாகத்தான் இருக்கும். ஒருவர் தனது கருத்தை , உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு செல்லலாம் என்ற  கருவை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும்  இன்று அவற்றின் தேவை என்பது பெரும்பாலும் பொழுதுபோக்குதான்.

குறிப்பாக இளைஞர்கள் புதிய புதிய வித்தைகளையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் களமிறக்குவார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்  சவால்கள் என்று சொல்லக்கூடிய விதவிதமான challenge-களை முன்னெடுத்து இயக்கம் போலக் கொண்டுசெல்கிறார்கள்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் சில நாட்களுக்கு முன்பு கிகி சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், ப்ளூவேல் சேலஞ்ச் என நிறைய சவால்கள் பதிவாகின. இந்நிலையில் இப்போது புதிதாக ‘வேக்கம் சேலஞ்ச்’ என்ற ஒரு புதிய சவால் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வேக்கம் சேலஞ்ச் என்பது மிகப்பெரிய பாலித்தீன் பையில் ஒருவர் தன்னை முழுமையாக மூடிக்கொள்ள வேண்டும், பின்னர் மற்றொருவர் வேக்கம் க்ளீனரை அந்த பாலித்தீன் பைக்குள் விட்டு ஆன் செய்கிறார். உடனே  அந்த பையை வேக்கம் க்ளீனர் இறுக்குறது. இதனை வீடியோவாக எடுத்து #VACCUMCHALLENGE என்ற ஹேஷ்டேகில் பதிவு செய்து வருகினறனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டாக இந்த சவால்களை செய்து வருகின்றனர், ஆனால் ஒரு சிலர் தலை வரையிலும் முழுமையாக மூடிக்கொள்வதால் எந்த நேரத்திலும் அது ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.

மேலும், இப்படி சவால்கள் என்ற பெயரில் சாகசம் காட்டினால் அது எந்த நேரத்திலும் விபரீதத்தை உண்டாக்கும் என்பதை மறந்தால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதற்கு கடந்த கால சவால்கள் உதாரணம் எனவும் வலைதளவாசிகள் தொடர்ந்து கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்போதும் சவால்களுக்கும் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த சவால்களை எதிர் கொண்டு தன்னை ஆக்க  வழிகளின் ஊடே எடுத்துச்செல்வதும், சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்துவதுமே சிறந்த வழி என்கின்றனர்  சமூக ஆர்வலர்கள். சமூக வலைதள மோகத்தில் இருந்து நம்மை மீட்க  புத்தகம் படிப்பது, திறந்தவெளி விளையாட்டுகளில் ஈடுபடுவது, மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது ஆகியவையே சிறந்த வழி என்கின்றனர் மருத்துவர்கள்.