Viral

எவரெஸ்ட் சிகரத்தில் 5,000 கிலோ குப்பைகளை அகற்றிய நேபாள அரசு!

எவரெஸ்ட்ப் பகுதியில் பரவிக்கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் முயற்சியில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலகின் உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் கருதப்படுகிறது. நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற ஆண்டு தோறும் ஏராளமான மலையேற்ற வீரர்களும், அவர்களுக்கு உதவியாக உள்ளூர் வாசிகளும் செல்வார்கள்.

அப்படி மலையேற்ற வீரர்கள் செல்லும் பொது அவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை கொண்டு செல்வார்கள். பெரும்பாலும் ஆக்சிஜஸன் பாட்டில், உணவு பொருட்கள், மருத்துவ உபகரணம் என எடுத்துச் செல்கின்றனர். கொண்டு போகும் பொருட்களையெல்லாம் பயன்படுத்திவிட்டு மலைப்பகுதியில் வீசிவிட்டு வந்து விடுகின்றனர்.

இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அதில், கூடாரங்கள் அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்ற கழிவு பொருட்கள் என 25 டன்களுக்கும் மேலாக குப்பைகள் அங்கு குவிந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து நேபாள ராணுவத்தால் எவரெஸ்ட்டை சுத்தப்படுத்தும் பணி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. 45 நாட்களில் 10 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்ற நேபாள அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், தற்போது 5 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றியுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது.