Tamilnadu

10.5% விவகாரம்: ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய தி.மு.க - தவறான கருத்தைத் திரும்பப் பெற்ற சி.வி.சண்முகம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று, 10.5% வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க தலைவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்வைத்துப் பேசினார்.

இதையடுத்து இன்று, தவறான கருத்தை முன்வைத்த சி.வி.சண்முகம் பேசிய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அப்போது பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "சி.வி.சண்முகம் தவறான தகவலைப் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவை நீக்க வேண்டும். அரசியல் செய்வதற்கான இடம் பேரவை இல்லை” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தி.மு.க கொறடா எ.வ.வேலு, ”உரிய சட்டப் பாதுகாப்போடு அந்த மக்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பான நடவடிக்கைகள் வரும்போது, அதற்குத் தேவையான முழு ஆதரவையும் தி.மு.க முன்னின்று வழங்கும்” என்றார்.

பின்னர் பேசிய தி.மு.க உறுப்பினர் மெய்யநாதன், ”அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 10.5% வன்னியர் இடஒதுக்கீடு, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தப்பட்டது.

1989-ஆம் ஆண்டு 20 சதவீத இடஒதுக்கீடு தந்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். இன்றைக்கு வரைக்கும் 36 வருடங்களாக நாம் அந்த இடஒதுக்கீட்டைத்தான் பயன்படுத்துகிறோம்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், ”10.5% இடஒதுக்கீட்டு விவகாரத்தில், நான் தவறான கருத்தைக் கூறிவிட்டேன். அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என்றார்.

Also Read: MMDR விவகாரம் : The New Indian Express-ல் வெளியான பொய் செய்தி - ஐ.பரந்தாமன் கடும் கண்டனம்!