Tamilnadu
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
சென்ற மாதம் தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஒரு பெரும் கட்சியின் தலைவர் வருகை புரிந்திருந்தார். அவர் செய்தியாளர்களைச் சந்தித்து, "நியாயமான தொகுதி மறுவரையறையை (Fair Delimitation) யார் ஆதரிக்கிறார்களோ, அவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பன்" எனப் பேசியிருந்தார்.
"வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா வரவிருக்கின்ற நிலையில், இந்த மசோதாவைப் பொறுத்தவரை தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?" என்ற ஒரு கேள்வியையும் எழுப்பிவிட்டுச் சென்றார்.இன்னும் வராத ஒரு மசோதாவை வரப்போவதாக அக்கட்சியின் தலைவரே கூறிவிட்டுச் சென்றார்.
குறிப்பாக, அவர்களின் கூட்டணியில் அக்கட்சியின் வாளாகச் செயல்படக்கூடிய தலைவர்களும், "இந்த மசோதா கூடிய விரைவில் வரப்போகிறது; வாருங்கள், திமுகவின் நிலைப்பாடு என்னவென்று பார்ப்போம்" என வீரவசனம் பேசியுள்ளனர்.
தொகுதி மறுவரையறையைப் (Delimitation) பொறுத்தவரையில் தி.மு.க-விற்கு ஒரே ஒரு நிலைப்பாடுதான் உள்ளது. தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எள்ளளவும் தீங்கு விளைவிக்காத வகையில் அது அமைய வேண்டும் என்பதே அதுவாகும்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தென்மாநிலங்களில் உள்ள அனைத்து முதலமைச்சர்களையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றியவர் எங்கள் தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். மாறாக, வரலாறு தெரியாமல் பேசக் கூடாது.கூட்டணிக் கட்சியின் கைப்பாவையாகச் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தினை நடத்தினார்.
அதற்கு நாங்கள், "முதலில் காவிரியில் தண்ணீர் வரவில்லை; மேகதாது அணை தொடர்பான எதிர்ப்பு ஏன் பதிவு செய்யப்படவில்லை?" எனக் கேள்விகளை எழுப்பினோம். குறிப்பாக, தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி நீர்ப் பங்கீடு பற்றி இதுவரையில் இந்த அரசு எதுவும் பேசவில்லை.மாறாக, நேற்று மாலை தமிழ்நாட்டின் முதலமைச்சர் சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார். முன்னர் காங்கிரஸ் கட்சியின் பேச்சைக் கேட்டு, காங்கிரசின் கைப்பாவையாக இருந்த விஜய், தற்பொழுது அமித் ஷாவின் பேச்சைக் கேட்டு 'நியாயமான தொகுதி மறுவரையறையை' (Fair Delimitation) ஆதரித்துள்ளார்.
தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் தொகுதி மறுவரையறையைப் (Delimitation) பொறுத்தவரையில், அமித் ஷாவைக் கண்டு பயந்து குட்டிக்கரணம் அடித்து, தலைகீழாக மாறிவிட்டாரோ என்கின்ற ஐயமும் கேள்வியும் எழுகிறது.கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணையைப் பொறுத்தவரையில், 'இதைக்கட்டினால் அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க முடியும்' எனக் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒரு கருத்துக்கூடத் தெரிவிக்கவில்லை.
பல ஆண்டுக்காலமாகக் காவிரி நீர்ப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், கர்நாடக அரசு தமிழ்நாடு அரசின் பேச்சைச் செவிசாய்த்துக் கேட்கவில்லை. இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் பல ஆண்டுகளாகத் தற்போதைய ஆட்சியாளர்களிடம் தெரிவித்து வந்ததாகும்.
ஆனால், அதைச் செவிசாய்க்காமல் 'கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவேன்' எனக் கூறியவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர். மத்திய ஆளுங்கட்சியுடன் சேர்ந்துகொண்டு, 'நியாயமான தொகுதி மறுவரையறை' (Fair Delimitation) விவகாரத்தில் உங்கள் கூட்டணியில் இருந்துகொண்டு செயல்படக்கூடிய எட்டப்பன் யார்? அது விஜய்யா? என்பதனைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரும்தான் கேட்டுச் சொல்ல வேண்டும்.
அந்த எட்டப்பன் யார் என்பதைத் தலைகீழாகப் பல்டி அடித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களே நீங்கள்தான் சொல்ல வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!