Tamilnadu

ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!

வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து இசுலாமியர் சொத்துகளை அடித்துப் பறிப்பது போல் இப்போது கிறிஸ்தவர்களின் சொத்துகளைப் பறிக்க, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்தச் சட்டம் ( FCRA ) என்ற சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் FCRA சட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய, இதனை ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலணைக்கு அனுப்ப வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், நமது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தலைமையில், இந்தியாவின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அடங்கிய 'சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை குழு' பிரதிநிதிகள், கடந்த 06.08.2026 அன்று உள்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.

கடந்த மார்ச் 2026-ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) திருத்த மசோதா 2026-ஐத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அதன் பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

இல்லையெனில், இந்த மசோதாவையும், 2010-ஆம் ஆண்டின் FCRA சட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய, இதனை ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (Joint Parliamentary Committee - JPC) பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தத் திருத்த மசோதாவால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகள் காரணமாக, ஆரம்பத்திலிருந்தே இதன் விதிகளை திமுக தீவிரமாக எதிர்த்து வருகிறது. எனவே, இக்குழுவினரின் இந்தக் கோரிக்கையை திமுக முழுமையாக ஆதரிக்கிறது.

சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், இந்தக் கூட்டு நடவடிக்கை குழுவின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Also Read: “ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!