Tamilnadu

கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களுக்குத் துறையூர் பகுதியைச் சேர்ந்த 'எஸ்.ஆர். என்டர்பிரைசஸ்' என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஆர். என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கண்காணிப்பாளராக உள்ள அருண் என்பவர், 100 ரூபாய் முத்திரைத் தாளில் தொழிலாளர்களிடம் கட்டாயக் கையெழுத்து வாங்கி வருகிறார்.

அந்தப் பத்திரத்தில், "துப்புரவுப் பணிக்கு வரும் பணியாளர்கள் அரசின் எந்தவொரு சலுகையையும் கோரக் கூடாது; குறிப்பாக நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ESI, PF போன்றவற்றைத் கேட்கக் கூடாது; பணியாளர் சங்கங்கள் சார்பில் பணி நிரந்தரம் கோரிப் போராட்டம் நடத்தக் கூடாது; மீறிப் போராட்டம் நடத்தினால் நிர்வாகம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்; எந்தவொரு பிரச்சினையும் செய்யக் கூடாது" என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தொழிற்சங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்த 'எஸ்.ஆர். என்டர்பிரைசஸ்' என்ற தனியார் நிறுவனம், 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அவர்களை நவீனக் கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது.

பணியாளர்கள் அரசின் எந்த சலுகையையும் கேட்கக்கூடாது; ESI, பிஎஃப் PF போன்ற அடிப்படை உரிமைகளைக் கோரக்கூடாது எனப் பத்திரத்தில் நிபந்தனை விதிக்கப்படுகிறது.

பணி நிரந்தரம் கேட்டு எந்த சங்கமும் போராட்டம் நடத்தக்கூடாது; மீறினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு பணியை விட்டு விலக வேண்டும் எனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது.

இந்த அராஜக ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றும் இந்தச் செயல், தவெக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும்.

துப்புரவுப் பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களைப் போராட விடாமல் தடுக்கும் இந்தத் தனியார் நிறுவனத்தின் அராஜகத்தை, 'தூய சக்தி' என்று பேசும் தவெக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? கேமரா முன் வேஷம் போடும் அதிகாரிகள் மற்றும் இந்த நிறுவனத்தின் மீது உடனடியாக விசாரணை நடத்தி, தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்!

ஜனநாயக நாட்டில் தொழிலாளர்களைப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அடிமைப்படுத்தும் இந்த அவலத்தை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்! உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது இந்தத் துரோகத்திற்கு நீங்களும் உடந்தையா? என கண்டனம் தெரிவித்து ஆளும் கட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Also Read: ‘தான் திருடி, பிறரை நம்பாள்..’ - களவாணித்தனத்தால் ஆட்சி நடத்தும் விஜய்.. பட்டியலிட்டு முரசொலி பதிலடி!