Tamilnadu

கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா - ரேவதி தம்பதி. இவர்கள் இருவரும் கடலூர் மாவட்டம் வடலூரில் தங்கி இருந்து கொத்தனார் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்த சூழலில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேவதி, பிரசவத்திற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 21-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் சிகிச்சையில் இருந்த அந்த பச்சிளம் குழந்தை நேற்று (ஜூன் 27) இரவு திடீரென உயிரிழந்தது. இதனால் செய்தியை கேட்டு மனமுடைந்த பெற்றோர் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதனிடையே கடந்த வாரம் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த தம்பதியின் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை திடீரென பிரசவ வார்டில் உயிரிழந்தது. இது குறித்து குழத்தையின் பெற்றோர் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில் ஒரே வாரத்தில் மீண்டும் ஒரு குழந்தை உயிரிழந்திருப்பது மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற மருத்துவ பயனாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே வாரத்தில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !