Tamilnadu

“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!

கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

’’பத்திரிகை நண்பர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக ஆட்சி அமைந்த பிறகு, முதன்முறையாக நம் ஆளுநர் இராஜேந்திர அர்லேகர் அவர்கள், இன்றைக்கு சட்டமன்றத்துக்கு வருகை தந்து, ஆளுநர் உரையினை வாசித்திருக்கிறார். பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளுநருடைய ஒரு தனிப்பட்ட உரை கிடையாது. அது அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய உரை, அரசின் `பாலிசி நோட்’ போன்ற ஒரு `ப்ளூ பிரிண்ட்’.

சுயதம்பட்டம் - சுயபுராணம்

இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள், அதையெல்லாம் எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு எல்லாம் எப்படிச் செய்யப்போகிறார்கள் என்பதை, முன்கூட்டியே சொல்லக்கூடிய ஒரு பாலிசி நோட்டாகத்தான் எப்பொழுதுமே ஆளுநர் உரை இருக்கும்.

ஆனால், இன்றைக்கு ஆளுநர் உரையை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அதில் இருக்கக்கூடியவை ஆளுங்கட்சியினர் `ரீல்ஸ்’ போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. அந்த அளவுக்கு முதலமைச்சர் அவர்கள் தன்னைப் பற்றியும், தன் கட்சியைப் பற்றியும் ஒரு சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளக்கூடிய, ஒரு சுயபுராணம் பாடிக்கொள்ளக்கூடிய ஒரு உரையாகத்தான் இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.

இன்னும் குறிப்பாகப் பார்த்தால், கடந்த ஐந்து வருடங்களாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கும்போது, எங்களுடைய முதலமைச்சர், எங்களுடைய அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய எந்த உரையையும் ஆளுநர் முழுமையாகப் படித்ததே கிடையாது. அதில் பல திருத்தங்களை ஆளுநர் செய்வார். ஆனால், இந்த முறை ஆளுநர் அவர்கள் இந்த அரசு என்ன தயாரித்துக் கொடுத்திருக்கிறதோ, அதை அப்படியே ஒரு வரி மாற்றாமல், ஒரு எழுத்து மாற்றாமல் அப்படியே வாசித்திருக்கிறார். இதிலிருந்தே இந்த அரசுக்கும், ஒன்றிய ஆளுங்கட்சியான பா.ஜ.க.விற்கும் ஒரு இணக்கமான ஒரு சூழ்நிலை, ஒரு கனெக்சன் ஏற்பட்டுவிட்டதோ என்கிற எண்ணம் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது.

திராவிட மாடல் அரசின் திட்டங்கள்-சாதனைகள்

அவர்களுடைய சொந்த சுய புராணத்தை எல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தீர்கள் என்றால், `ஒலிம்பிக் மையங்கள்’, `திறன் பயிற்சி மையங்கள்’ `69 சதவிகித இட ஒதுக்கீடு’, `இருமொழிக் கொள்கை’, `தேசிய கல்விக் கொள்கை- 2020 எதிர்ப்பு’, `நிலுவையில் இருக்கக்கூடிய கல்வி நிதி கேட்டுக் கோரிக்கை’, `வறுமையில்லா தமிழ்நாடு’, `உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி’, `சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை’, `கீழடி உள்ளிட்ட அகழாய்வுகள்’, `இந்தியாவிலேயே அதிகமாக நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு’ இப்படி எங்கள் அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளைத்தான் மீண்டும் இவர்கள் படித்திருக்கிறார்கள்.

இப்படி கடந்த திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மேல் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, இவர்கள் ஆட்சியின் தோல்விக்கான பழியைத் தூக்கி மீண்டும் திராவிட மாடல் அரசின் மீது, தி.மு.க அரசின் மீதே இவர்கள் போட்டிருக்கிறார்கள். மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடன் இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் நம் பெருமை

இரண்டு, மூன்று இடங்களில் ஆளுநர் உரையில் `சென்ற அரசினுடைய நிர்வாகம் சரியில்லை’ என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள், சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அப்படி ஆட்சி நிர்வாகம் சரியில்லாமல் இருந்திருந்தால், எப்படி இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிற மாதிரி பல திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றிக் காட்டியிருக்கும்?

உதாரணத்துக்கு, சென்ற வாரம் நம் முதலமைச்சர் அவர்கள் டெல்லிக்குப்போய் நிதி ஆயோக் கூட்டத்தில் நம் தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு திட்டங்களைச் செய்திருக்கிறோம், எவ்வளவு சாதனைகளைச் செய்திருக்கிறோம், இன்றைக்கு இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசியிருக்கிறார். அதெல்லாம் அவருடைய ஒரு மாத ஆட்சியினுடைய சாதனைகளா? கிடையாது.

காப்பி பேஸ்ட் அரசு!

முன்னாள் முதலமைச்சர், எங்களுடைய தலைவர், எங்களுடைய திராவிட மாடல் அரசினுடைய சாதனைகளைத்தான் போய் டெல்லியில் நம் முதலமைச்சர் அவர்கள் வாசித்துவிட்டு வந்திருக்கிறார். அந்த வகையில், மொத்த முரண்பாடுகளுடைய உருவமாகத்தான் இன்றைக்கு இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. இந்த அரசு அமைந்து 38 நாட்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கென்று சொல்வதற்குச் சாதனைகள் எதுவுமே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே எங்களுடைய திராவிட மாடல் அரசின் திட்டங்கள்தான், அதனுடைய நீட்சிதான். இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாகத்தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு திட்டங்களை இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தத் திட்டங்களை எல்லாம் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்று ஒரு ப்ளூ பிரிண்ட்டாக, ஒரு முன்னோட்டமாக, ஒரு ட்ரைலராகத்தான் இன்றைக்கு இந்த உரை இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். மக்களும் அதை எதிர்பார்த்தார்கள்.

இவர்களுடைய அறிவிப்புகளை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்று இந்த ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம், ஆனால் ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஒரு வெற்று அறிக்கை

சொன்ன வாக்குறுதிகளில் இருந்து எப்படி எல்லாம், என்ன காரணம் எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் என்பதற்காக நேற்று முன்தினம் அதற்கு ஒரு முன்னோட்டமாக ‘வெள்ளை அறிக்கை’ என்று சொல்லி ஒரு வெற்று அறிக்கையை நேற்று முன் தினம் வெளியிட்டார்கள். அதைப்பற்றி நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நிதி அமைச்சர், அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார். அதற்கு கேள்விகளும் கேட்டிருக்கிறார், அதற்கு எந்த பதிலும் இதுவரைக்கும் இல்லை.

இப்படி மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், இது எல்லாத்துக்கும் மேல் சட்டம் ஒழுங்கு இன்றைக்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகளில் நீங்களே ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறீர்கள். ஒரு சின்ன புள்ளிவிவரத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்படியெல்லாம் டயலாக் பேசினார், வீர வசனம் பேசினார் என்று தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள், நீங்கள் அத்தனை பேரும் பார்த்திருப்பீர்கள்.

என்ன சொன்னார்? ‘பச்சை பிள்ளைகள், படிக்கிற பிள்ளைகள், சின்ன பொண்ணுங்க, வீட்டில் இருக்கிற பொண்ணுங்க, வேலைக்குப் போகிற பொண்ணுங்க, இவர்கள் எல்லாருக்கும் நடக்கிற கொடுமையைச் சொல்ல முடியவில்லையே சிஎம் சார்’ என்று எங்கள் தலைவரைப் பார்த்து, அப்போது இருக்கக்கூடிய முதலமைச்சரைப் பார்த்து, இன்றைய முதலமைச்சர் அவர்கள் வீர வசனம் பேசினார். இன்றைக்கு அவர்களுடைய ஆட்சியில் தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்த கொடுமைகள் எல்லாம், குற்றங்கள் எல்லாம் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்தில் வரும் அல்லவா, ‘சார், கண்ணாடியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் சார்’ என்கிறஅந்த நிலைமையை இன்றைக்கு முதலமைச்சர் ஏற்படுத்தி இருக்கிறார். அதுவும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக இன்றைக்கு நடக்கக்கூடிய அனைத்து குற்றங்களிலும் யார் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தீர்கள் என்றால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், அவர்களின் கட்சியினரே அந்த குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு?

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் ஆளுநர் உரையில் எந்தவிதமான ஒரு குறிப்பும் கிடையாது. அதேபோல, ஏற்கனவே நன்றாக இருக்கக்கூடிய திட்டங்களைக் கெடுப்பதை, எதிர்க்கட்சிகள் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நேற்று கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், எங்கள் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த ஒரு திட்டம், அரசின் முத்திரை திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கி இருக்கிறார்கள், பெயரை மாற்றி இருக்கிறார்கள். அது எங்களின் தலைவர் பெயரில் இருக்கக்கூடிய திட்டமும் கிடையாது, டாக்டர் கலைஞருடைய பெயரில் இருக்கக்கூடிய ஒரு திட்டமும் கிடையாது, ஒரு நல்ல திட்டம். ஏன் நீக்கி இருக்கிறார்கள் என்றால், ‘நான் முதல்வன்’ என்று சொன்னாலே, ‘முதல்வன்’ என்று சொன்னாலே மக்களுக்கு எங்கள் தலைவர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பெயர்தான் மக்களுக்கு ஞாபகம் வரும் என்று, அப்படிப்பட்ட ஒரு குறுகிய எண்ணத்தோடு அந்த திட்டத்தின் பெயரையே நீக்கி இருக்கிறார்கள். அந்த திட்டத்தின் அச்சீவ்மென்ட்ஸ் வீடியோஸ் எல்லாம் சோசியல் மீடியாவில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகள். ஆனால் எத்தனை பிரச்சனை நடந்து கொண்டு இருந்தாலும், ‘இன்றைக்கு முதலமைச்சர் கோட் சூட் போட்டு இருக்கிறார்’, ‘இன்றைக்கு முதலமைச்சர் வேட்டி சட்டை கட்டி இருக்கிறார்’, ‘இன்றைக்கு முதலமைச்சர் டிபன் பாக்ஸில் லஞ்ச் எடுத்துக்கொண்டு வந்து சாப்பிடுகிறார், கோட்டையிலேயே சாப்பிடுகிறார், அவர் வாயில் அவரே வைத்துச் சாப்பிடுகிறார்’ என்று அவர்கள் கட்சியின் விர்ச்சுவல் அபியூசர்ஸ் (Virtual abusers) எல்லாம் இப்படிப்பட்ட கண்டன்ட்களை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி என்றைக்கு நம் முதலமைச்சர் வாயைத் திறப்பார் என்று கேட்பதற்காகத்தான், இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ‘தயவு செய்து வாயைத் திறங்கள் சிஎம் சார், பதில் சொல்லுங்கள் சிஎம் சார்’ என்பதற்காகத்தான் இன்றைக்கு இந்த பேட்ஜை நாங்கள் அணிந்து கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் எதிர்ப்பை, எங்களின் எண்ணங்களைத் தெரிவித்து இருக்கிறோம்.

அதுவும் எப்போதாவது பேசுகிற முதலமைச்சர் பார்த்தீர்கள் என்றால், அப்பொழுதும் தான் முதலமைச்சர் என்பதை மறந்து, இன்னும் பிரச்சார மோடிலேயே பேசிக் கொண்டிருக்கிறார். சிஎம் தான் அப்படி இருக்கிறார் என்று பார்த்தீர்கள் என்றால், அவர்களின் ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் முழுக்க முழுக்க ரீல்ஸ் வெறியிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே அவர்களுக்குக் கன்டென்ட். எல்லாமே ரீல்ஸ்தான். இதையெல்லாம் பற்றி முதலமைச்சர் கவலைப்படுகிற மாதிரி துளியும் தெரியவில்லை. அவரின் ஒரே சிந்தனை இந்த ஆட்சியை எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்கிற அந்த கவலையில்தான் அவர் இருக்கிறார்.

பீரோ புல்லிங் என்று சொல்வார்கள். அது மாதிரி இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள் அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் எம்.எல்.ஏ புல்லிங் செய்துக் கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘பேனிக் பையிங்’ (Panic Buying) என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திடீரென்று ஒரு பேரிடர் காலமோ, இல்லை ஒரு கடையடைப்போ நடக்கும் போது, மக்கள் எல்லாம் அவசர அவசரமாக சென்று வீட்டிற்குத் தேவையான சாப்பாடு பொருட்கள், வண்டிக்குத் தேவையான பெட்ரோல், டீசல் எல்லாம் போட்டு வைத்துக் கொள்வார்கள். அதற்குப் பெயர் பேனிக் பையிங் என்பார்கள். ஒரு ஆர்டிபிஷியல் டிமாண்ட் கிரியேட் செய்வது. அது மாதிரி இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம், ஆட்சி அமைந்த நாளில் இருந்து இன்றைக்கு வரைக்கும் தன் ஆட்சியைப் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் பேனிக் பையிங் செய்துகொண்டிருக்கிறார்.

மாற்றம் மாற்றம் என்று சொல்லிவிட்டு இன்றைக்கு இந்த ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்றைக்குப் பொதுமக்கள் என்னவென்று சொல்கிறார்கள்? இது மாற்றம் இல்லை. மாட்டிக்கொண்டோம் நாம் எல்லாம் சேர்ந்து இவர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்று புலம்ப வைத்திருக்கிறது இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த அரசு. எனவே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் என்று யாருடைய பாதுகாப்புக்கும், எந்த ஒரு வலிமையான திட்டங்களும் புதிய ஆளுநர் உரையில் நிச்சயம் இல்லை. அதனால் கடந்த ஆட்சியின் மேல், காழ்ப்புணர்வை மட்டுமே வெளிப்படுத்துகின்ற இந்த ஆளுநர் உரையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கேள்வி: ஆளுநர் உரையை முழுமையாக வாசித்துவிட்டுப் போயிருக்கிறார். தி.மு.க ஆட்சியின்போது ஆளுநர் பாதியிலேயே கிளம்பிப் போய்விடுவார். இந்த நிகழ்வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: ஏற்கனவே சொன்ன மாதிரிதான். கடந்த ஐந்து வருடத்தில் ஒரு முறை கூட ஆளுநர் அவர்கள் தி.மு.க அரசு கொடுத்திருக்கக்கூடிய உரையை முழுமையாகப் படித்ததே கிடையாது. மாற்றம் செய்வார். ஆனால் மாற்றம் செய்யும்போது அப்பொழுது இருந்த எங்கள் முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த முறை பார்த்தீர்கள் என்றால், ரொம்ப அபூர்வமாக முழு உரையும் ஒரு வார்த்தை, ஒரு கமா, ஒரு ஃபுல் ஸ்டாப் கூட எடுக்காமல் வாசிக்கும் போதே, உங்களுக்குத் தெரியும். நம் ஆட்சியாளர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தாருக்கும், பா.ஜ.க-விற்கும் ஒரு பெரிய அண்டர்ஸ்டாண்டிங் வந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது.

கேள்வி: சட்டப்பேரவையில் மரபு மாற்றப்பட்டு, இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : மிகப்பெரிய ஆச்சரியங்கள், அதிசயங்கள் இப்போது இங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. மரபு மீறப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் எப்போதுமே தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் வாசிக்கப்படும். முடியும் போது ஆளுநர் கிளம்புவதற்கு முன்பு தேசிய கீதம் ஒளிபரப்பப்படும். ஆனால் இந்த முறை இரண்டு முறை தேசிய கீதத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள் என்றால், மீண்டும் சொல்கிறேன், பா.ஜ.க-வும், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும், ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கிற்கு வந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

Also Read: “தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!