Tamilnadu

“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!

த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

த.வெ.க அரசு பொறுப்பேற்ற கடந்த ஒரு மாத காலத்தில் ஏராளமான பாலியல் கொடுமைகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வருகின்றன. சில நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சார்ந்த த.வெ.க நிர்வாகிகளால் த.வெ.க செயல்பாட்டாளராக உள்ள இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 14.06.2026 அன்று தூத்துக்குடி ஒன்றியம் தாளமுத்துநகர் அருகே உள்ள ஆனந்த நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் 12 வயது சிறுமிக்கு மத போதகராக உள்ள பாதிரியார் அருள்ராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத போதகர் கைது செய்யப்பட்டு விசாரனை நடைபெறுவதாக அறியவருகிறது.

இளம் பெண்கள் வயது முதிர்ந்தோர் குழந்தைகள் என எல்லா வயது பெண்கள் இது போன்ற பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சிங்கப்பெண் படையை உருவாக்கி பெண்களை பாதுகாப்போம் என்று சொல்கின்ற முதலமைச்சர் சுய ஒழுக்கம் பற்றி உபதேசம் செய்து வருகிறார்.

உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படைக்கு தொடர்புகொள்ள தனியான உதவி எண் எதுவும் இல்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜீனா சவால் விட்டு வெற்று பேச்சு பேசி மக்களையும் பெண்களையும் ஏமாற்றுகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. செயல்படாத அரசாக மக்களை பாதுகாக்காத அரசாக த.வெ.க அரசு இருந்து வருகிறது. அரசின் மெத்தனமான இப்போக்கு கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை