Tamilnadu

மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (த.வெ.க.) அரசு ஆட்சியமைத்தது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் காரணமாக த.வெ.க. அரசு தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, பதவியேற்பு விழா நடைபெற்ற நாளிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் முதலில் “வந்தே மாதரம்”, பின்னர் தேசிய கீதம் மற்றும் இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

தமிழ்நாடு அரசியல் மரபின்படி, அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், இந்த நடைமுறை மாற்றப்பட்டது கடும் எதிர்ப்பை கிளப்பியது. இதுதொடர்பாக த.வெ.க. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் ராஜ் மோகன் உள்ளிட்டோர் பல்வேறு விளக்கங்கள் அளித்ததுடன், இனி பழைய நடைமுறையே தொடரும் என உறுதியளித்திருந்தனர்.

இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் அதே சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீண்டும் முதலில் “வந்தே மாதரம்” பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இதனால், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இடம்பெறும்” என்ற த.வெ.க. அரசின் முந்தைய உறுதி காப்பாற்றப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநரின் நடைமுறைக்கு த.வெ.க. அரசு அடிபணிந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Also Read: ”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!