Tamilnadu

”பரபரக்கும் களம்.. தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை”!

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (22.4.2026), மாலை 6.30 மணியளவில் “தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்” காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்கள் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

அதுபோது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள், நாளை (23.4.2026) நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், தேர்தல் விதிகள், வேட்பாளர்கள் உரிமை, வாக்குச் சாவடி முகவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.

அத்துடன், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி, வாக்குப் பதிவு நாளான நாளை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்க உரையாற்றியதுடன், அனைவரின் கருத்தையும் - தொகுதி நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

ஏற்கனவே இன்று காலையில் திமுக பாக முகவர்கள், நிர்வாகிகள் எவ்வாறு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என ஒரு மடலை எழுதி வெற்றியை அறுவடை செய்வதற்கான வழிவகைகளையும், ஆலோசனைகளையும் கழகத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில்;

இறுதிக்கட்ட ஆலோசனைகளையும், கள நிலவரங்களையும் தற்போது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

Also Read: ”வெற்றி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே! விழிப்புணர்வு அவசியம்”: கழகத்தினருக்கு முதலமைச்சர் மடல்!