Tamilnadu

”திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர திமுக ஆட்சி வேண்டும்” : சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

வட சென்னை புளியந்தோப்பு பகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஒரு மாநிலத்தின் செயல்பாடுகளை பாராட்டும் எண்ணம் பல முதலமைச்சர்களுக்கு இருக்காது. ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் சிறப்புகளை பாராட்டி என்னுடன் உரையாடியுள்ளார். எந்த அகந்தையும் இல்லாதவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டினார்.

“முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000 உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இத்தகைய திட்டங்கள் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லை. குறிப்பாக திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு திட்டங்களால் ஈர்க்கப்பட்டதால்தான் தேர்தல் பரப்புரைக்காக வந்துள்ளேன்.”

“NDA கூட்டணி என்பது பாஜக–அதிமுக கூட்டணி அல்ல; அது ‘New Delhi Alliance’. அதிமுகவை பாஜக கைப்பற்றியுள்ளது. அதிமுக முழுவதுமாக பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளது. பீகாரில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். முதலமைச்சராக இருந்த நிதிஸ் குமார் இன்று ஒரு எம்.பி-யாக மாறி உள்ளார். இதே நிலைதான் அதிமுகவுக்கும் ஏற்படும்!”

டெல்லி மக்கள் தற்போது மிகப்பெரிய தவறிழைத்துள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்களை தற்போது ஆளும் பாஜக அரசு நிறுத்தியுள்ளது. குறிப்பாக, இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டதால், டெல்லி மக்கள் ரூ.1000 வரை மின் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைக்க அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் துணிச்சல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது. அதற்கு உதாரணமாக அவர் எடுத்த நடவடிக்கையால்தான் தொகுதி மறுவரையறை சட்டமசோதா தோல்வியடைந்துள்ளது. தமிழ்நாட்டிற்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார் என பேசினார்.

பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு போராளி; எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதவர். பாசிச பாஜக ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்.

டெல்லியில் இரண்டு முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையும் அதே பொறுப்பில் வந்திருக்க வேண்டும். ஆனால், திட்டமிட்டு அவரை முடக்க வேண்டும் என்ற நோக்கில் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வழக்கில் ஆதாரம் இல்லை என தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது என பேசினார்.

Also Read: ”ஓய்வின்றி உழைப்போம்.. திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்போம்” : 75,000 BLA2-க்களுடன் முதலமைச்சர் பேச்சு!