Tamilnadu

“தமிழுக்காக ஒன்றிய அரசு செலவு செய்த தொகை எவ்வளவு?” - தயாநிதி மாறன் எம்.பி. சரமாரி கேள்வி!

2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது எதிர்கட்சிகளின் பல கோரிக்கைகளுடன் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சர்வதேச அளவில் தமிழ் மொழி ஆய்வை விரிவுபடுத்துவதற்கும், ஆவணக் காப்பகங்களை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

கடந்த ஐந்து ஆண்டுகளில், செம்மொழி தமிழின் வளர்ச்சிக்காகவும், ஆராய்ச்சிக்காகவும், உலகம் முழுவதும் பரப்பவும் ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு? இதே விவரங்களை மற்ற செம்மொழிகளுக்கும், ஆண்டு மற்றும் திட்டம் வாரியாக தர முடியுமா?

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் (CICT) மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி செய்ய, ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்க, மொழிபெயர்ப்பு திட்டங்கள், ஆய்வுதவிகள் மற்றும் தமிழ் ஆய்வு பற்றிய உலக மாநாடுகள் நடத்துவதற்காக வழங்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன?

செம்மொழித் தமிழில் கல்விசார் ஆராய்ச்சி, புத்தக வெளியீடுகள், உலகளவில் பரவலாக்கல் மற்றும் உயர்கல்வி ஆகியவற்றை, இந்நிதிகள் எவ்விதம் வலுப்படுத்தியுள்ளன என்பதை மதிப்பீடு செய்ய ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா?

சர்வதேச அளவில் தமிழ் மொழி ஆய்வை விரிவுபடுத்துவதற்கும் ஆவணக் காப்பகங்களை உருவாக்குவதற்கும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

தமிழின் செம்மொழிப் பாரம்பரியத்தின் தொடர் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அதற்கானநிதி உதவியையும் அதிகரிக்கநிறுவன சுயாட்சியையும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா?

Also Read: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!