Tamilnadu

அரசு மருத்துவமனையில் புதிதாக 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடம்: திறந்து வைத்த துணை முதல்வர்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.2.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் சென்னை, சேப்பாக்கம் சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை வளாகத்தில் 32.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 66,658 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் உடன் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார். 

இக்கட்டடத்தின் தரைதளத்தில், அறுவை சிகிச்சை அரங்கம், இரத்த மாதிரி சேகரித்தல் மற்றும் ஆய்வகம், முதல் தளத்தில் பேறுகால கவனிப்பு அறைகள், பிரசவ அறைகள், பிரசவத்திற்கு பிந்தைய கவனிப்பு வசதி, சிசு கவனிப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் மறு உயிர்ப்பு, நோய் தொற்று தனி வார்டு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

இரண்டாம் தளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை  அரங்குகள், துளைமூலம் அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு வசதிகள், தொடர் கண்காணிப்பு, மயக்கம் துய்த்தல், வலி நிவாரணம் போன்ற வசதிகளுடன் தாய்-சேய் நலம் காக்கும் வகையில் இந்த மருத்துவமனை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.  

துணை முதலமைச்சர் அவர்கள் இந்த கூடுதல் கட்டடத்தில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிகிச்சை வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் மகப்பேறு மருத்துவ சிகிச்சை வசதிகளை பார்வையிட்டார். 

சென்னை, சேப்பாக்கம் சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்திதா ய்சேய் நல மருத்துவமனை  என்று அழைக்கப்படும் இந்த மருத்துவமனையானது, "The Royal Victoria Castle & Gosha Hospital for Women" என்ற பெயரில் 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

இந்த மருத்துவமனை, பெண்களுக்காக பெண்களால் கடந்த 141 ஆண்டுகளாக சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. 18 ஏப்ரல் 1921 அன்று மதராஸ் அரசு இந்த மருத்துவமனையின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது. மே 1948 இல், இது அரசு கஸ்தூரிபா காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2005ஆம் ஆண்டு, இந்த மருத்துவமனை BEMONC & CEMONC பயிற்சி மையமாக அறிவிக்கப்பட்டது. (BEMONC - அடிப்படை அவசர பிரசவ மற்றும் பச்சிளங் குழந்தை பராமரிப்பு), (CEMONC - முழுமையான அவசர பிரசவ மற்றும் பச்சிளங் குழந்தை பராமரிப்பு)

2007ஆம் ஆண்டு, "சமூக மகப்பேறியல் நிலையம்" (Institute of Social Obstetrics) ஆக மேம்படுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு, EmOC பயிற்சிக்கான மாநில மையமாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது இந்த மருத்துவமனை MVA (Manual Vacuum Aspiration), லாப்ரோஸ்கோபி பயிற்சி, அல்ட்ராசவுண்ட் (USG) பயிற்சி, CEMONC பயிற்சி, கால்போஸ்கோபி பயிற்சி, யூரோகைனகாலஜி பயிற்சி, PPH தொடர்ந்து பராமரிப்பு பயிற்சி, உயிரியல் மருத்துவ கழிவு மேலாண்மை பயிற்சி, EMOC (Emergency Obstetric Care), தக்ஷதா (Dakshata) பயிற்சி, இம்பிளானான் (Implanon) பயிற்சி உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு பயிற்சி மையமாக செயல்படுகிறது:

695 படுக்கைகள் வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் MLCU (மிட்வைஃப் வழிநடத்தும் பராமரிப்பு பிரிவு), NCU (பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு),  இரத்த வங்கி (Component Separation வசதி உடன்), யூரோகைனகாலஜி, காது மூக்கு தொண்டை பிரிவு, குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்த மருத்துவமனைக்கு 1,70,731 வெளிநோயாளர்களும் (OP), 1,32,886 உள்நோயாளர் (IP) வருகை தந்து சிகிச்சை பெற்றுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனையில் 6,265 இயல்பான பிரசவங்களும், 2,730 சிசேரியன் (LSCS) அறுவை சிகிச்சைகளும், 4,323 பெரிய அறுவை சிகிச்சைகளும், 8,418 சிறிய அறுவை சிகிச்சைகளும், 1,200 குடும்ப நல அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73வது பிறந்தநாள்… கூட்டணி கட்சியினர் வாழ்த்து மழையில் முதலமைச்சர்!