Tamilnadu

தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா : எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - 5 சிறப்புகள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் அரியூர் சோலைக் காட்டில் அமைக்கப்பெற்ற தமிழ்நாடு அரசின் முதல் இரவு வான் பூங்காவினை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இரவு வான் பூங்கா என்பது செயற்கை ஒளி மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட இயற்கை பரப்பாகும். இங்கு நிலவு, நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் பிற விண்வெளி நிகழ்வுகளை தெளிவாகக் காண முடியும். உயரமான நில அமைப்பு, அடர்ந்த காடு மற்றும் குறைந்த நகர ஒளி மாசுபாடு ஆகியவற்றால் கொல்லிமலை இயற்கையான இருள் சூழலை வழங்குகிறது. இதனால் இரவு வான் காட்சிகளை பாதுகாக்கவும், விண்வெளி நிகழ்வுகளை காண்பதற்கும் சிறந்த இடமாக இது திகழ்கிறது.

25.06.2024 அன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கேற்ற தகுதி மற்றும் வானத்தில் தெளிவு நிலைமைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு அரியூர்சோலை காப்புக்காடு இந்த திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டது.

ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இரவு வான் பூங்கா கீழ்க்காணும் அம்சங்களை கொண்டுள்ளன:

கட்டமைக்கப்பட்ட வான் கண்காணிப்பு அமர்வுகளுக்கான மூன்று மேம்பட்ட தொலைநோக்கிகள் மற்றும் தள செயல்பாடுகளுக்கு தேவையான நிலையான மின்சாரத்தை வழங்க கூடிய வகையில் சூரிய ஒளி மின்சார வசதி.

இந்த மையம் பகல் நேரங்களில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே வானியல் குறித்த அறிவியல் கல்வி மற்றும் வானியல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக செயல்படும். நட்சத்திரங்களை பார்வையிடுவதற்கு குறுகிய கால அமர்வுகள் நடத்தப்படும்.

வனத்துறையால் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். தங்குமிட வசதிகளும் உரிய நேரத்தில் செய்து தரப்படும். திட்டமிட்ட நட்சத்திர பார்வை அமர்வுகள் நடத்தப்படும். இரவு நேர முழுவதும் தங்காமல் பங்கேற்கும் வசதியும் வழங்கப்படும். குறிப்பிடத்தக்க வானியல் நிகழ்வுகளின்போது, குறிப்பாக அமாவாசை நிகழ்வுகளின் போது, உகந்த தெரிவுநிலையை உறுதி செய்வதற்காக முழு இரவு நட்சத்திரப் பார்வை முகாம்கள் மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை ஏற்பாடு செய்யப்படும்.

இந்த முயற்சி தமிழ்நாட்டை ஒரு பொறுப்பான வானியல் சுற்றுலா தலமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் சுற்றுலா மேம்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புகளுடன் இணைந்திருப்பதை உறுதி செய்கிறது. பாதுகாப்பு, கல்வி மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட பார்வையாளர் அணுகலை ஒருங்கிணைப்பதன் மூலம், இரவு வான் பூங்கா சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் உள்ளூர் வாழ்வாதார வாய்ப்புகளை வலுப்படுத்துகிறது.

Also Read: ‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடப்பகுதி… நீதித்துறைக்கு இது பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!