Tamilnadu

திருவான்மியூர் TO உத்தண்டி - 13.30 கி.மீ நீளத்திற்கு ரூ.2100 கோடியில் மேம்பாலம் : அடிக்கல் நாட்டிய CM!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.2.2026) தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்

தமிழ்நாட்டில் நான்கு வழிச்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை பொது- தனியார் பங்களிப்பு மூலம் செயல்படுத்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) நிறுவப்பட்டது.

2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கையாளும் விதமாக சென்னை நகரின் கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மூலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 13.30 கி.மீ. நீளத்திற்கு 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

இந்த சாலை மேம்பாலம் பொது–தனியார் பங்களிப்பு (PPP) அடிப்படையில், ஹைப்ரிட் ஆனுட்டி மாடல் (HAM) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மேம்பாலம், திருவான்மியூரில் ECR–Lattice Bridge சாலை சந்திப்பிற்கு முன்பாக தொடங்கி, உத்தண்டியில் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவழிப் போக்குவரத்துக்காக 17.25 மீட்டர் அகலத்துடன், 5.5 மீட்டர் உயரத்தில், நான்கு வழித்தட சாலை மேம்பாலம் முழு நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நீலாங்கரை மற்றும் அக்கரை போன்ற இடங்களில் இருந்து மேலேறும் மற்றும் கீழிறங்கும் சாய்வுப் பாதைகள் (Ramps) அமைக்கப்படுகின்றன.

மேலும், அக்கரை, நீலாங்கரை மற்றும் Lattice Bridge சாலை போன்ற முக்கிய சந்திப்புகள் மேம்படுத்தப்படுவதுடன், சில பகுதிகளில் தற்போதுள்ள சாலைகள் ஆறுவழிச் சாலைகளாக அகலப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ், சாலை வரைகுறிகள், சாலை குறியீட்டு பலகைகள், பிரதிபலிக்கும் மற்றும் சூரிய சக்தி ஸ்டட்கள், ஒலி தடுப்பு சுவர்கள், பாதுகாப்பு தடுப்புகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அத்துடன், தூண்களுக்கிடையிலான பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும், உயர்த்தப்பட்ட வழித்தடம் முழுவதும் தொடர்ச்சியான எல்.இ.டி. விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டம், நிறைவேற்றப்படுவதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சென்னை மாநகர மக்களுக்கு பாதுகாப்பான, விரைவான மற்றும் வசதியான பயணம் உறுதி செய்திடவும் வழிவகுக்கும்.

Also Read: “திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்” : அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!