Tamilnadu
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்டம்... கருத்தரங்கம் தொடக்கம் - விவரம்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் நான்காம் தொகுதி நூலினை வெளியிட்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினைத் தொடக்கி வைத்தார்.
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 2022-2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, இத்திட்டத்தைச் செயல்படுத்த 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வேர்ச்சொல் உறவினை ஆய்வு செய்யும் இத்திட்டம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேற்பார்வையில் முதன்மைப் பதிப்பாசிரியர் முனைவர் கு. அரசேந்திரன் அவர்களின் தலைமையில் ஜூலை 2022ஆம் ஆண்டு முதல் நான்காண்டுத் திட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதன்மைப் பதிப்பாசிரியர் உட்பட 20 அறிஞர்கள் பணிசெய்து வருகின்றனர்.
இந்தோ-ஐரோப்பிய மொழிகள் யாவும் 461 வேர்ச்சொற்களில் உருவானதென ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் Walter Skeat கண்டுபிடித்துள்ளார். இந்த 461 வேர்ச்சொற்களில் 300 வேர்ச்சொற்கள் தமிழுடன் உறவுடையன என இக்குழு கருதுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை 12 தொகுதிகளாக வெளியிடத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையுடன் 13.1.2025இல் ஒப்பந்தம் செய்துள்ளது.
25.3.2025 அன்று முதலமைச்சர் அவர்கள் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் வெளியிட்டார்கள். அதனைத் தொடர்ந்து இரண்டாம் தொகுதி மற்றும் மூன்றாம் தொகுதி நூல்களைச் 18.1.2026 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள்.
உலகத் தாய்மொழி நாளான இன்று (21.2.2026) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் நான்காம் தொகுதி நூலினை வெளியிட நார்வே நாட்டுப் பேராசிரியர் முனைவர் கிளாஸ் பீட்டர் சாலர் பெற்றுக்கொண்டார்.
இன்று வெளியிடப்பட்ட நான்காம் தொகுதி நூலில் 19 தமிழ் வேர்ச்சொற்களிலிருந்து இலத்தீன், கிரேக்கம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் சமஸ்கிருதம், பாலி, சிங்களம் போன்ற கீழை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் உருவான வரலாறு, கருதுகோள் (Hypothesis) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து பன்னாட்டு மொழியறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. தமிழின் தொன்மைச் சிறப்பினைப் பற்றியும் உலக அளவில் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் தொகுதிகள் பெற்றுள்ள சிறப்பிடம் பற்றியும் இக்கருத்தரங்க அமர்வுகளில் அறிஞர்கள் உரையாற்றினார்கள்.
Also Read
-
47 ஆண்டுகளுக்கு பிறகு... “யாரு ஹீரோ...?” - சரியாக 12.07-க்கு வெளியானது KH x RK Glimpse வீடியோ!
-
திருவள்ளுவருக்குக் காவி உடை: முழு சங்கியாக மாறிய எடப்பாடி பழனிசாமி!
-
“இந்த மாதிரி கோமாளி கூட்டத்தோடலாம் நாம சண்டைபோட வேண்டியிருக்கு...” - துணை முதலமைச்சர் கலகல பேச்சு!
-
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் : மாணவர்களுக்கு AI பயிற்சி!