Tamilnadu

டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டை பற்றியும் தமிழர்களை பற்றியும் பெருமையாக பேசுவார். ஆனால் அதே வாய் வட மாநிலங்களில் தமிழ்நாடு மீது வெறுப்பை விதைக்கும் வகையில் பேசும். அதோடு தமிழர்கள் மீதும் வன்மத்தை கொட்டும். அதோடு தமிழர்கள் மீது ஒரவஞ்சனையோடு ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடிக்கு, ” தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ.3,458 கோடி சமக்ரசிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்?, தொகுதி மறுவரையரையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?, பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் VB G RAM G கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?, பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?” இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருந்தார்.

ஆனால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்காத பிரதமர்,”பா.ஜ.க - NDA டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம்” என கூறியுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது!

பிரதமர் அவர்களே…

ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…

நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDA Betrays TN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “70% முதலீடுகள் - உற்பத்திக்கு தயாராகும் நிறுவனங்கள்” – சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்!