Tamilnadu
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
சென்னையிலிருந்து திருத்தணிக்கு மின்சார இரயிலில் வட மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர் பயணித்துள்ளார்.அப்போது அதே இரயிலில் பயணம் செய்த 4 சிறுவர்கள் கையில் கத்தியை வைத்துக்கொண்டு ரீல்ஸ் எடுத்துள்ளனர். மேலும் அந்த வட மாநில இளைஞரை நோக்கி அந்த கத்தியை வைத்து தாக்குவது போல் செய்கை செய்தும் வீடியோ எடுத்துள்ளனர்.
கத்தியை அந்த சிறுவர்கள் கொண்டு வந்ததால் பயந்த அந்த இளைஞரோ அவர்களை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த சிறுவர்கள், அந்த இளைஞர் இறங்கும் இடத்தில் இறங்கி, அவரை இரயில் நிலையத்தின் வெளிப்புற பகுதியில் வைத்து தங்கள் கைகளில் வைத்திருந்த பட்டாக் கத்தியால் கை, கால், தலை உள்ளிட்ட உடல் முழுவதும் தாக்கியுள்ளனர். அதோடு இதனை அந்த சிறுவர்கள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
இதில் இரத்த கோலத்தில் இருந்த அந்த இளைஞர் தடுக்க முயன்றபோதும் அது பலனளிக்காமல் இருந்துள்ளது. பின்னர் மயக்கமடைந்த அந்த இளைஞரை, அந்த சிறுவர்கள் அதே பகுதியில் விட்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த சிலர் வாலிபர் ஒருவர் கத்தி காயங்களுடன் இருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுவர்கள் தாங்கள் எடுத்த வீடியோவை ரீல்ஸாக பதிவேற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 2 பேரையும், திருவாலங்காடு அருகே அரிச்சந்திராபுரம் மற்றும் திருத்தணி அருகே உள்ள நெமிலி பகுதிகளைச் சேர்ந்த மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 17 வயதுடையவர் ஆவர்.
இதனிடையே இதுகுறித்து சமூக வலைதளத்தில் பலரும் வதந்தி பரப்பி வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அவரை பின் வருமாறு :-
கடந்த 27 ஆம் தேதி ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர் தொழிலாளியாகவும், வேலைக்காகவும் இங்கு வரவில்லை. 2 மாதத்திற்கு முன்பு தான் அவர் இங்கு வந்து, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துள்ளார்.
அப்படி கடந்த 27 ஆம் தேதி, சென்னையில் இருந்து திருத்தணி வரை செல்லும் இரயிலில்தான் இந்த 4 இளைஞர்கள் இவரை தாக்கியுள்ளனர். மிரட்டி இரயிலில் இருந்து இறக்கி திருத்தணியில் பட்டா கத்தியால் தாக்கி வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசார் அங்கு சென்று பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காவல்துறை சார்பில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. BNS 109 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதால் சிற்றார் நீதி அறிவுறுத்தலின்படி ஜாமீன் கிடைத்து பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
2 பட்டா கத்திகள் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து, மொழி தெரிந்த ஓய்வு பெற்ற அதிகாரி மூலம் சம்பவம் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு புகார் பெறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது. அவர் சிகிச்சை முடிந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். தற்போது அவர் நன்றாக இருக்கிறார்.
மேலும் வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டது என பலரும் கூறி வருவது முற்றிலும் தவறானது. அந்த இளைஞர் சிறுவர்கள் வீடியோ எடுக்கும்போது முறைத்து பார்த்ததாக கூறியே தாக்கியதாக விசாரணையில் அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். வட இந்திய தொழிலாளர்கள் அதிகமாக இருக்கூடிய இடங்களில் இது போன்று தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. சிறு, சிறு சம்பவம் ஒன்று இரண்டு நடைபெற்றாலும், அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வட மாநிலத்தை சார்ந்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்படவில்லை.
மேலும் தாக்குதல் நடத்திய நபர்கள் போதை காரணமாக தாக்குதல் நடத்தியாக தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. போதை பொருட்களை காவல்துறை தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் கூட ஒடிசா மற்றும் ஆந்திரா வரை சென்று 1000 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, அதை கொண்டு வரும் நபர்களை காவல்துறை கைது செய்துள்ளனர். திருவள்ளூரில் மட்டும் இந்த ஆண்டில் 102 கிலோ கஞ்சா, 447 மெத்தபெட்டமெயின், TABENTADOL மாத்திரைகள் 51 ஆயிரத்து 95 கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவேற்றும் காணொளிகளை கண்காணித்து வருகிறது. தொடக்க காலத்திலேயே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, சிறார்கள் என்றால் பெற்றோர்களை அழைத்து பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.
Also Read
-
மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.4000 கோடி நிதி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தது என்ன?
-
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு : இடைக்கால பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?
-
“25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
-
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !