Tamilnadu

“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, " தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு வடச் சென்னை வளர்ச்சியடைந்து வருகிறது. வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை இங்கு நிறைவேற்றியுள்ளோம். வடசென்னை மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு வருகிறது.

பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 22 முதல்வர் படைப்பகங்கள் சென்னை மாநகர் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று முதல்வர் படைப்பகம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் சாதி, மாதம், இனத்தால் மக்களை பிளவு படுத்த முடியவில்லை என்ற கவனையில் உள்ளது பா.ஜ.க. அதனால் நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். இவர்களின் பிரிவிணைவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது.

அமைதி பூங்காவாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை மணிபூராக மாற்ற நினைப்பவர்களின் கனவு இங்கு பலிக்காது.

எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு முழுவதுமாக தனது அடிமைசாசனத்தை எழுதி கொடுத்துவிட்டார். பாஜக கொண்டு வரக்கூடிய மக்கள் விரோதத் திட்டங்களை புகழ்ந்து பேசக்கூடியவராக பழனிசாமி மாறிவிட்டார். 'தான் பிடித்தால் பிள்ளையார், மற்றவர்கள் பிடித்தால் சாணம்' என்ற கணக்கில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் பழனிசாமி” என தெரிவித்துள்ளார்.

Also Read: “வணிகர்களின் தோழன் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!