Tamilnadu
”சொன்னதை செய்பவன்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் - இதுதான் சாட்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.11.2025) ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை.
மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை, இந்த சிறப்பான அரங்கத்தை திறந்து வைப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பெருமை அடைகிறேன் என்று சொல்வதைவிட வீரம் அடைகிறேன்! எழுச்சி அடைகிறேன்! அதுதான் உண்மை!
பூலித்தேவன் - வீரபாண்டிய கட்டபொம்மன் - தீரன் சின்னமலை - மருதிருவர் - வீரமங்கை வேலு நாச்சியார் - மாவீரன் பொல்லான் என்று, நம் தமிழ் மண் ஈன்றெடுத்த மாவீரர்கள் அத்தனை பேரும் நம்முடைய மண் - மொழி - மானம் ஆகியவற்றை காத்திருக்கக்கூடியவர்கள். இடைவிடாமல் அதற்காக போராடிக் கொண்டிருக்கவேண்டும் என்று இன்றைக்கு நமக்கெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள்!
கம்பீரமாக இருக்கும் இந்த மாவீரன் பொல்லான் சிலையையும், சிறப்பாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தையும், தனிக்கவனம் எடுத்து, எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில், இதை கட்டியிருக்கக்கூடிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு என்னுடைய சார்பில் மட்டுமல்ல, உங்கள் அனைவரின் சார்பிலும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
சொன்னால், சொன்னதை செய்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – அதற்கு சாட்சியாக சொல்லவேண்டும் என்று சொன்னால், இந்த மாவீரன் பொல்லான் சிலைதான் அதற்கு சாட்சி!
2019-ல் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், மகுடஞ்சாவடியில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா – அதை முன்னின்று நடத்தியவர் நம்முடைய அதியமான் அவர்கள். அதில் பங்கேற்று, சிறப்பித்து பெருமை சேர்த்தவர் நம்முடைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஈஸ்வரன் அவர்கள்.
மாவீரன் பொல்லானுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்போம் என்று அந்த நிகழ்ச்சியில் நான் உறுதியளித்தேன். இன்றைக்கு அதை உங்கள் முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். இன்று திரையில் பொல்லானின் வாழ்க்கை வரலாற்றை சிறு குறிப்பாக எடுத்து வெளியிட்ட நேரத்தில் அதை சுட்டிக்காட்டினார்கள்.
பவானிப்போர் - ஓடாநிலைப் போர் - அரச்சலூர் போர் என்று அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் மாவீரன் பொல்லான் அவர்கள்!
பொல்லானின் வீரத்தை கண்டு, சினம் கொண்ட ஆங்கிலேயப் படை தளபதி கர்னல் ஹாரிஸ் தலைமையிலான படையால், மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடைய தியாகத்தைப் போற்ற அவருடைய வீரத்தை காலத்துக்கும் எடுத்துச் சொல்ல, இப்படியொரு நினைவுச் சின்னம் வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக இருந்த வந்த கோரிக்கை, இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசின் மூலமாக அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது!
இந்த பெருமையான தருணத்தில், ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏன் உங்களின் பலருக்குக் கூட அது நினைவிருக்கும் என்று கருதுகிறேன். கடந்த ஜூன் மாதம் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில், ஒரு செய்தி வந்திருந்தது… அதை படித்ததுமே, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது… அந்தச் செய்தி என்னவென்றால்… அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம், அந்த மக்களுக்கு எத்தகைய ஒளிவிளக்காக திகழ்கிறது என்பதைப் பற்றி தி இந்து பத்திரிகையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைப் பெற்று, ஆதாரத்துடன் இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.
அந்தச் செய்தியில், 2009-ல் 193 அருந்ததியினர் மாணவர்கள் பொறியியல் படித்துக் கொண்டிருந்த நிலைமாறி, இந்த ஆண்டு 3 ஆயிரத்து 944 மாணவர்கள் பொறியியல் படிக்கிறார்கள் என்றும், 2023-24-ஆம் ஆண்டில், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்!
இதில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பெருமை என்னவென்றால், உங்களில் பலருக்கும் தெரியும்… இந்த உள் ஒதுக்கீடு சட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்ற முடிவு செய்தார் – முடிவு செய்து, அது சட்டமன்றத்தில் சட்ட மசோதவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் – ஆனால், திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனால் அவரால் எழுந்து நடமாட முடியாத நிலை அன்றைக்கு ஏற்பட்டது. அன்றைக்கு காலையில் “உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு வா” என்று எனக்கு தொலைபேசியிலிருந்து அழைப்பு வருகிறது. வந்தவுடன் என்னை அழைத்து சொன்னார், நான் ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் இன்றைக்கு நிறைவேற்றவேண்டும் – அறிமுகப்படுத்த வேண்டும் – என்னை மருத்துவர்கள் செல்வதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அதனால், நீ சென்று என்னுடைய சார்பில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்து என்று எனக்கு உத்தரவிட்டார்கள்.
அந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வாய்ப்பு இந்த அடியேன் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்று இன்றைக்கு நான் பெருமைப்படுகிறேன்!
ஒரு சமூகத்தையே முன்னேற்றுவதற்கான அந்த சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில் என்னுடைய பங்கும் இருந்திருக்கிறது என்பதை எண்ணி இன்றைக்கும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுதான் எனக்குக் கிடைத்த பெருமை!
அதுமட்டுமல்ல, அந்தச் செய்தியில், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் தி இந்து பத்திரிகையில் எழுதியிருந்தார்கள்… அது என்னவென்றால், “தி.மு.க. அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து, தரவுகளை எல்லாம் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, அவர்களுடைய பரிந்துரைகளை எல்லாம் பெற்று, சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால், தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெற்று வருவது தான் வரலாறு!” என்று பாராட்டியிருந்தார்கள்!
இலட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியதால் இந்தப் பாராட்டுதான், தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய அடையாளம்!
எல்லார்க்கும் எல்லாம் என்ற நம்முடைய இலட்சியத்தை அடைய வேண்டும். பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் உயர்த்த வேண்டும் என்று நம்முடைய திராவிட மாடல் அரசின் சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அது அத்தனையும் இங்கே பட்டியிலிட முடியாது – நேரமில்லை – அடுத்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றாக வேண்டும். அதை பட்டியலிட்டால், இன்றைக்கு முழுவதும் போதாது. எனவே, அருந்ததியர் இன மக்களுக்காக செய்யப்பட்டுள்ள சிலவற்றை மட்டும் தான் அதுவும் தலைப்புச் செய்திகளாக உங்களிடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தேனி மற்றும் கரூர் மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 182 கோடி ரூபாயில் 26 விடுதிகள் - 74 கோடி ரூபாயில், 107 பள்ளிக் கட்டடங்கள் - 20 கோடி ரூபாயில், 26 சமுதாயக் கூடங்கள் - 134 கோடி ரூபாயில், 131 கிராம அறிவுசார் மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்! அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில், 29 மாணவர்களுக்கு 10 கோடியே 30 இலட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம்!
முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்காக 329 மாணவர்களுக்கு 3 கோடியே 29 இலட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியிருக்கிறோம்! போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 3 இலட்சத்து 69 ஆயிரத்து 550 பேருக்கும், ஃப்ரி-மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 5 இலட்சத்து 42 ஆயிரத்தி 396 மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறோம்!
தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியத்தை திருத்தி அமைத்திருக்கிறோம்! 2021-ல், 18 ஆயிரத்து 225 பேர் மட்டுமே இருந்த இந்த வாரியத்தில், நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், மூன்று இலட்சம் பேர் உறுப்பினர்களாக வாரியத்தில் சேர்ந்திருக்கிறார்கள்! இவர்களுக்கு எல்லாம் 11 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது!
அதுமட்டுமல்ல, அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்கிறோம். சுகாதார அங்காடிகள் அமைத்திருக்கிறோம். இந்த வாரியத்துக்கு ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறோம். கடந்த ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஆறு முக்கிய சிறப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இப்படி என்னால் தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டிருக்க முடியும்!
இதையெல்லாம் செய்வது, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்! எல்லோரும் சமமாக வாழுகின்ற சமூகம் உருவாக வேண்டும்! அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி என்பதற்காகத்தான்! இந்த இலட்சியத்தோடு நடைபோடும் நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும், நீங்கள் எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. காரணம் உங்கள் எழுச்சியை, உணர்ச்சியை, ஆர்வத்தை, ஆரவாரத்தை காண்கின்றபோது அதை நான் உணர்கிறேன். எனவே, அந்த உணர்வோடு இந்த மணிமண்டபத்தை, இந்த அரங்கத்தை, இந்த மாவீரன் அவர்களின் சிலையை உங்கள் அன்போடு, உங்களின் மகிழ்ச்சியோடு இதை நான் திறந்து வைத்திருக்கிறேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, வாழ்க மாவீரன் பொல்லான்! வாழ்க அவரது புகழ்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : சேலம் அ.தி.மு.க நிர்வாகி கைது!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு இதுதான் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
பா.ஜ.க-வின் கொட்டத்தை அடக்கிய பஞ்சாப் : சண்டிகர் திட்டத்தில் இருந்து பின் வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!