Tamilnadu

"4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்"- முதலமைச்சர் பெருமிதம்!

பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் வழங்கும் உன்னதமான திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல் பயனாளியான சரோஜாம்மாள் மருத்துவப் பெட்டகம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தேவையான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் (Palliative Care), இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy) மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டையாலிசிஸ் செய்துகொள்வதற்கான (CAPD) பைகள் வழங்குதல் போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னார்வலர்கள்,இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் போன்றவர்கள் இச்சேவைகளை வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில், ஒரு இயன்முறை பணியாளர் மற்றும் ஒரு நோய் ஆதரவு செவிலியர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனை குறிப்பிட்டு பாராட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்த்துகள்!

நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்"என்று கூறியுள்ளார்.

Also Read: பீகார் வெற்றிக்கு சொந்தம் கொண்டாட மோடி, நிதிஷை விட தேர்தல் ஆணையத்துக்கே தகுதி உள்ளது - முரசொலி விமர்சனம்!