Tamilnadu

யார் பொய் சொல்வது? : ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதிலடி!

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதியை இதுவரை ஒன்றிய பா.ஜ.க அரசு வழங்கவில்லை. இதன் மூலம் பாரபட்சமாக இருப்பது யார்?, பொய் சொல்லுவது யார்? என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி கொடுத்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், ” சிவகங்கை மாவட்டத்திற்கு நவ.14 மற்றும் 15 ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் சிங்கம்புணரி பேரூராட்சி புதிய கட்டடத்தை திறந்து வைக்கின்றார். பின்னர் அண்ணா மண்டபத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ சிலையையும், முன்னாள் அமைச்சர் மாதவனின் சிலையினையும் முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார்.பிறகு நடைபெறும் அரசு விழாவில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதியை இதுவரை ஒன்றிய பா.ஜ.க அரசு வழங்கவில்லை. இதன் மூலம் பாரபட்சமாக இருப்பது யார்?, பொய் சொல்லுவது யார்? என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”S.I.R லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் ஆபத்து உள்ளது” : உச்சநீதிமன்றத்தில் தி.மு.க வாதம்!