Tamilnadu

வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் இன்று வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர், மேட்டுக்குப்பம் சாலை, பாரதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வுக்காணும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பருவமழைக்கு முன்பாகவும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். அந்தவகையில் தான் பருவ மழை காலங்களில் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளோ, நோய் பாதிப்புகளோ இல்லாத நிலை என்பது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.

கடந்த 20 நாட்களுக்கு முன்னாள் சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு அவர்கள் தலைமையில் முக்கிய சேவை துறைகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒரு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டு, 10க்கும் மேற்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாவட்ட உயரலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் அந்தந்த மாவட்டத்தில் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது மருத்துவ முகாம்கள் 10,000 என்கின்ற வகையில் நடத்தப்பட்டு, ஏதாவது கிராமத்தில் 3க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமேயானால் அங்கு உடனடியாக மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தி ஒரு ஆண்டிற்குள்ளாகவே 27,000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இப்போது தான் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. நேற்று வரை 17 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. பருவமழை கூடுதலாக பெய்யத் தொடங்கியவுடன் எவ்வளவு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்கின்ற தகவல் பத்திரிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

மக்களைத்தேடி மருத்துவம் எனும் திட்டத்திற்கு செப்டம்பர் திங்கள் 25 ஆம் தேதி அமெரிக்கா ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் முதல்முறையாக இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசின் ஒரு துறைக்கு united Nation intergrency Task Force Award என்கின்ற உலகளாவிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிற்கு கிடைத்திருக்கின்ற பெருமை. மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் இதுவரை பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 2,48,68,185 பேர், தொடர் சேவை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 4,68,03,041 பேர்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!