Tamilnadu

தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

மேலும் வெளி ஊரில் வேலைபார்க்கும், படிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடுவார்கள். இதனால் மக்கள் எவ்விதமான சிரமமும் இல்லாமல் ஊர்களுக்கு செல்ல ஒவ்வொரு ஆண்டும் அரசு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்வது வழங்கம்.

இந்த ஆண்டும் கூடுதலாக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு மக்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில், தீபாவளிக்கு அடுத்தநாள் அக்.21 பொதுவிடுமுறை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும்,

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணிநாள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!