Tamilnadu

“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வேலையில்லா காலத்தில் வைப்பு நிதியை முன்கூட்டியே பெறும் காலக்கெடுவையும், முழுமையான பணத்தை எடுக்கும் காலக்கெடுவையும், முன்பிருந்த 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது

இந்நிலையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்றத்தில் தி.மு.க குழுத் தலைவருமான கனிமொழி MP தனது சமூக வலைதள பக்கத்தில் ஒன்றிய அரசை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

அதில், பா.ஜ.க அரசின் புதிய EPFO விதிகள் அதிர்ச்சி அளிப்பதோடு, உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவுள்ளன. மக்கள் தங்கள் சொந்த சேமிப்பை திரும்பப் பெறுவதற்கு ஒரு வருடம் முழுவதும் வேலையில்லாமல் இருக்க கட்டாயப்படுத்துவது, ஓய்வு பெறும் வரை அவர்களின் நிதியில் 25% சதவீதத்தை முடக்கிவைத்துக் கொள்வது, மேலும், ஓய்வூதியம் திரும்பப் பெறுவதை 3 ஆண்டுகள் தாமதப்படுத்துவது ஆகியவை கொடுமையானது.

லட்சக்கணக்கானோர், ஏற்கனவே வேலை இழப்புகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளால் போராடி வரும் நிலையில், இந்த முடிவு ஒன்றிய அரசுக்கு இந்திய மக்கள் மீது அக்கறை இல்லாததைக் காட்டுகிறது. நடுத்தர வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதிலிருந்து ஒன்றிய அரசு தவறிவிட்டதை வெளிப்படுத்துகிறது.

கடினமான சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் கடின உழைப்பால் சேமித்த பணத்தை முடக்குவது மனிதத்தன்மையற்ற செயல். இந்த மக்கள் விரோத மற்றும் கொடுமையான விதி மாற்றங்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், அவற்றை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” தெரிவித்துள்ளார்.

Also Read: “இனியாவது திருந்த வேண்டும் : அ.தி.மு.க வெளிநடப்பு” - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!