Tamilnadu
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025க்கான பரிசளிப்பு விழாவில் ஆற்றிய உரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 பரிசளிப்பு விழாவில் உங்களையெல்லாம் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் நம்பர் 1 இடத்தை அடையவேண்டும் என்றுதான், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விளையாட்டுத் துறைக்கென்று ஒரு தனி அமைச்சகத்தை முதன் முதலாக அமைத்தார்.
கலைஞர் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இடத்தை அடைந்து கொண்டிருக்கின்றது. அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தான், இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரும் விளையாட்டுப் புரட்சியை, ஒரு மாபெரும் இயக்கமாகவே மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இதற்காக 84 கோடி ரூபாயை ஒதுக்கி கொடுத்தார்கள்.
குறிப்பாக, பரிசுத்தொகையாக 37 கோடி ரூபாயை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கி கொடுத்தார்கள். அதற்கு விளையாட்டு வீரர்களின் சார்பாக, துறையின் சார்பாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, எங்களுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
2023-ஆம் ஆண்டு, இதே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றார்கள். ஆனால், இன்றைக்கு 2025 ஆம் ஆண்டு சுமார் 16 இலட்சம் இளைஞர்கள் நம்முடைய முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்கள். இதிலிருந்து இந்தப் போட்டிகளுக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும், நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்ற நோக்கமே, தமிழ்நாடு முழுவதும் வெளியில் தெரியாமல் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களின் திறமையை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே இலட்சியம்.
தமிழ்நாட்டில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புகின்ற ஒரு launching pad தான், நம்முடைய முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025.
இந்த மேடையில் உங்கள் முன்பு 2 முக்கியமான வீரர்கள் உட்காந்திருக்கிறார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்த தம்பி பெனடிக்சன் ரோகித் அவர்கள் இன்றைக்கு நீச்சல் போட்டியில் சர்வதேச அளவில் வெற்றியை தொடர்ந்து குவித்துக் கொண்டு வருகிறார்.
இப்போதுகூட ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை (Men's 100-meter butterfly) நீச்சல் பிரிவில் நம்முடைய சகோதரர் பெனடிக்சன் ரோகித் அவர்கள் 52.5 வினாடிகளில் நீந்தி இன்றைக்கு தேசிய சாதனை (national record) படைத்திருக்கிறார். அடுத்து வருகின்ற, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக மிக கடினமாக பயிற்சி எடுத்து வரும், ரோகித் அவர்களுக்கு நாம் அத்தனைபேரும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
அதே மாதிரி, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை ஷர்வானிகா இங்கே நம்மோடு உட்காந்திருக்கிறார். சதுரங்கப் போட்டியில் இன்றைக்கு இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு வீராங்கனைதான் ஷர்வானிகா. அவங்களுடைய வயது கூட இன்னும் 10 வயது ஆகவில்லை.
ஆனால், கிட்டத்தட்ட 10 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை ஏற்கனவே வென்று காட்டியுள்ளார்கள். இது ஷர்வானிகாவுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பெருமை என்பதை விட, it is a proud moment for Indian Chess, குறிப்பாக தமிழ்நாடு Chess விளையாட்டுக்கு இது பெருமையான தருணம் என்று சொல்லலாம்.
ரோகித், ஷர்வானிகா மாதிரி, இன்னும் பல நூறு வீரர்கள் உங்களில் இருந்து வருவார்கள் என்ற நம்பிக்கை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இருக்கிறது. அதற்காகத்தான், தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன், உயரிய ஊக்கத்தொகை என அனைத்து வகையிலும், நம்முடைய அரசு உங்களுக்கு துணை நிற்கின்றது. இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஏன் என்றால், பயிற்சியும், மன உறுதி இருந்தால், நீங்கள் நிச்சயம் சாதித்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு இருக்கின்றது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தயாராக இருக்கின்றார்.
இந்த விழாவிற்கு தலைமையேற்றுள்ள திராவிட மாடல் நாயகர், முதலமைச்சர் அவர்களை விழாவிற்கு வருக, வருக என்று வரவேற்கிறேன்.
செஸ் வீராங்கனை சகோதரி ஷர்வானிகா அவர்களையும், நீச்சல் வீரர் பெனடிக்சன் ரோகித் அவர்களையும் வருக, வருக என வரவேற்கின்றேன். அமைச்சர் அண்ணன் சேகர்பாபு உள்ளிட்ட
அனைத்து அமைச்சர் பெருமக்களையும், மேயர் சகோதரி பிரியா;
துணைமேயர் அண்ணன் மகேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகளையும், அண்ணன் தயாநிதி மாறன், அண்ணன் பரந்தாமன் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையினுடைய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் அவர்களையும்;
பெருநகர சென்னை மாநகரட்சியினுடைய ஆணையர் ஜெ.குமரகுருபரன், ஐ.ஏ.எஸ் அவர்களையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினுடைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, ஐ.ஏ.எஸ், அவர்களையும், முதல் மூன்று இடங்களை வென்றுள்ள மாவட்டங்களுடைய ஆட்சித் தலைவர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஐ.ஏ.எஸ் அவர்களையும், தி. ஸ்நேகா, ஐ.ஏ.எஸ் அவர்களையும், பவன்குமார், ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட வந்திருக்கக்கூடிய அனைத்து அரசு அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும், விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்ற வீரர்கள், வீராங்கனைகள் உங்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கின்றேன்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய உங்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கின்றேன்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்து, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மிகச்சிறப்பாக நடத்திய அனைத்து அதிகாரிகள், நடுவர்கள், தன்னார்வலர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து அவர்களையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளிகள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
I warmly welcome the representative of various considers to this very prestigious event.
அதேபோல என்னுடைய மனதுக்கு என்றும் நெருக்கமான நம்முடைய, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதி மாணவர்கள், மாணவிகள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கின்றேன்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, கிட்டத்தட்ட 1,300 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்திய தங்கை நிவேதா ஜெசிகா உள்ளிட்ட, மெட்ராஸ் மோட்டார் கிளப்பைச் (Madras Motor Club) சேர்ந்த சகோதரிகள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
இங்கே கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்ற இருக்கக்கூடிய
கலைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வந்திருக்கக்கூடிய கழக நிருவாகிகளையும், பத்திரிக்கை நண்பர்களையும் வரவேற்று மகிழ்கின்றேன். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து வெல்லட்டும். களம் நமதே! நன்றி வணக்கம் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!