Tamilnadu

“கலை என்பது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் ஆற்றிய சிறப்புரை பின்வருமாறு,

முதலில், இங்கே விருது பெறுகின்ற அத்தனை கலைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், கைத்தட்டல்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் எப்போதுமே கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடுகின்ற ஒரு இயக்கம். தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த கலையையும், ஒரு கருவியாக பயன்படுத்தியவர்கள் தான், நம்முடைய திராவிட இயக்க தமிழ்நாட்டு தலைவர்கள். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் நாடகத் துறையிலும், திரைத் துறையிலும் முத்திரைபதித்தவர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்திருக்கின்றவர்தான். இன்றைக்கும், இசையையும், நாடகங்களையும், திரைப்படங்களையும் ரசிக்கக் கூடியவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். எனவே தான், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் நடத்துகின்ற அத்தனை நிகழ்ச்சிகளையும், அதனுடைய செயல்பாடுகளையும் தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தி வருகின்றார்.

இந்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், கலைமாமணி விருதுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும் இந்த அரங்கத்திற்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கே அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்கள் குறிப்பிட்டது போல, சங்கீத நாடக சங்கம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்று மாற்றியமைத்தவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான்.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியதும் டாக்டர் கலைஞர் அவர்கள் தான். அதே போல் ஆரம்பத்தில், 'கலா சிகாமணி', என்ற பெயரில் தான் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் பெயர் மாற்றம் செய்து “கலைமாமணி விருது” என்று அறிவித்தார்.

1967-ஆம் ஆண்டில், கலைஞர் அவர்களே கலைமாமணி விருதிற்கு சிறந்த வசனகர்த்தாவாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் அமைச்சர், முதலமைச்சராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்த அரங்கத்தில் கலைஞர் அவர்களுடைய பெயரைச் சொன்னதும், அவர் எழுந்து, விருது வாங்குவதற்காக மேடைநோக்கி வந்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், அந்த விருதை கலைஞர் அவர்களிடம் கொடுக்காமல், விருதுக்கான பதக்கத்தை (Medal-ஐ) தன்னுடைய கழுத்திலே போட்டுக் கொண்டார். பிறகு தான், அந்த பதக்கத்தை கலைஞர் அவர்களின் கழுத்தில் அணிவித்தார். கலைமாமணி விருது பெறுவதால், கலைஞர் அவர்களுக்கு கிடைத்த பெருமையை தனக்கு கிடைத்த பெருமையாக கொண்டாடினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

எழுத்தாளர், நாடக ஆசிரியர், வசன கர்த்தா, பாடலாசிரியர், அரசியல் தலைவர், முதலமைச்சர் என்று கலைஞர் அவர்களுக்கு எத்தனையே பரிணாமங்கள் இருந்தாலும், கடைசிவரைக்கும் அவருடைய அடையாளமாக 'கலைஞர்' என்கிற பெயர்தான் இன்று வரைக்கும் நிலைத்து நீடித்து இருக்கிறது.

இங்கே விருதுகளை பெறவிருக்கின்ற கலைஞர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள நான் விரும்புகின்றேன். கலைமாமணி விருதை வாங்குவதால் உங்களுக்கு பெருமை என்று சொல்வதை விட, உங்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை கொண்டிருப்பதால் நம்முடைய தமிழ்நாட்டுக்கு அது பெருமை என்பதை நான் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

2009ஆம் ஆண்டு, இதே கலைவாணர் அரங்கத்திலே நடந்த நிகழ்ச்சியில், கலைமாமணி விருதுகளை வழங்கிவிட்டு பேசும்போது டாக்டர் கலைஞர் அவர்கள் இதே மேடையில் பேசியிருக்கிறார், நீங்கள் தேசிய விருதுகளை வாங்கலாம், சர்வதேச விருது பெறலாம். ஆனால், எந்த விருதாக இருந்தாலும் அது ஒரு தாயின் முத்தத்திற்கு ஈடாகாது.

இந்த கலைமாமணி விருது என்பது அந்த தாயின் முத்தத்திற்கு ஈடானது என்று கலைஞர் அவர்கள் சொல்லியிருக்கின்றார். தாயின் முத்தத்திற்கு நிகரான அந்த கலைமாமணி விருதை தான் இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு தர இருக்கின்றார்கள்.

நம்முடைய அரசு அமைந்த பிறகு, நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித் தொகையை, 2 ஆயிரம் ரூபாயில் இருந்து, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல, இந்த மன்றத்திற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்டு வந்த நிதி 3 கோடி ரூபாயாக இருந்தது, நம்முடைய அரசு அமைந்த பிறகு அந்த 3 கோடி ரூபாயை வருடத்திற்கு 4 கோடி ரூபாயாக உயர்த்தி கொடுத்தார் முதலமைச்சர் அவர்கள்.

அதேபோல், ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகின்றது. அந்த விழாக்களில், அனைத்து கலைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கின்ற வகையிலும், நம்முடைய கலைகளை மீட்டெடுக்கின்ற வகையிலும், இசைச் சங்கமம், கலைச் சங்கமம் என கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து கலைவிழாக்கள் நடத்தப்படுகின்றது.

சமீபத்தில், தமிழில் சிறப்பான கலை நூல்களை வெளியிடுகின்ற 5 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. எழுத்தாளர்களுக்கு வீடுகள், மறைந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு மணி மண்டபம் போன்றவற்றை நம்முடைய அரசு தொடர்ந்து உருவாக்கி வருகின்றது.

இங்கே வந்திருக்கக் கூடிய கலைஞர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய ஒரு வேண்டுகோளை வைக்க நான் விரும்புகின்றேன். உங்களுடைய கலைகளை நீங்கள் உங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

Social media-வான YouTube, Instagram, Twitter போன்ற தளங்களில் உங்களுடைய கலைகளை நீங்கள் உலகறியச் செய்ய வேண்டும். கலை என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கும், அக்கா விஜயா தாயன்பன் அவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த இந்த மன்றத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இயல், இசை, நாடக மன்றம் என்றைக்கும் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும்.

இங்கே பல்வேறு பிரிவுகளில் கலைமாமணி விருதுகளைப் பெற்றுள்ள அத்தனை கலைஞர்களுக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளையும், என்னுடைய பாராட்டுக்களையும் தெரிவித்து, இந்த வாய்ப்பிற்கு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்து, விடைபெறுகின்றேன், நன்றி, வணக்கம்.

Also Read: இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!