Tamilnadu

முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (8.10.2025) திண்டுக்கல் மாவட்டம் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், மொத்தம் 30 லட்சம் ரூபாய்கான பரிசுத்தொகை காசோலைகள், சான்றிதழ்கள் மற்றும் முதலமைச்சர் கோப்பை நினைவு சின்னம் ஆகியவற்றை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் 6.10.2025 முதல் 8.10.2025 வரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள்-2025 நடைபெற்றது.

இப்போட்டிகளில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 38 மாவட்டங்களைச் சார்ந்த 311 வீரர்கள் மற்றும் 315 வீராங்கனைகள் என மொத்தம் 626 பேர் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டிகளில் கல்லூரி மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடமும், சேலம் மாவட்டம் 2-ஆம் இடமும், மதுரை மாவட்டம் 3-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

மேலும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடமும், சென்னை மாவட்டம் 2-ஆம் இடமும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் 3 ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த வீரர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பரிசாக தலா ரூ.75,000 வீதம் 10 வீரர்களுக்கு ரூ.7,50,000-மும், இரண்டாம் இடம் பிடித்த வீரர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பரிசாக தலா ரூ.50,000 வீதம் 10 வீரர்களுக்கு 5,00,000-மும், மற்றும் மூன்றாம் இடம் பிடித்த வீரர்களுக்கு வெண்கலப்பதக்கம் மற்றும் பரிசாக தலா ரூ.25,000 வீதம் 10 வீரர்களுக்கு ரூ.2,50,000–மும் என மொத்தம் ரூ.15,00,000-மும்,

இப்போட்டியில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பரிசாக தலா ரூ.75,000, வீதம் 10 வீராங்கனைகளுக்கு ரூ.7,50,000-மும், இரண்டாம் இடம் பிடித்த வீராங்கனைகளுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பரிசாக ரூ.50,000 வீதம் 10 வீராங்கனைகளுக்கு 5,00,000-மும், மற்றும் மூன்றாம் இடம் பிடித்த வீராங்கனைகளுக்கு வெண்கலப்பதக்கம்;

10 வீராங்கனைகளுக்கு பரிசாக தலா ரூ.25,000 வீதம் ரூ.2,50,000-மும் என மொத்தம் ரூ.15,00,000-மும் என பரிசு தொகையாக மொத்தம் 30.00 இலட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகை காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு, வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கினார்.

Also Read: ”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!