Tamilnadu
தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (6.10.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வன உயிரின ஆணையத்தின் 22-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள 4 உயிரியல் பூங்காக்களின் விரிவான மேம்பாட்டுக்காக 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் அவர்கள், 4 உயிரியல் பூங்காக்களின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், விலங்குகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துதல் தொடர்பான தற்போதைய முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்களை ஆய்வு செய்தார்.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, ஏற்கனவே அதன் மின்சாரத் தேவையில் 80 சதவிகிதத்தை சூரிய மின்சக்தியின் மூலம் பூர்த்தி செய்து வருகிறது. முழுமையான கார்பன் நடுநிலைமையை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் உயிரியல் பூங்காக்கள் அணுகல்தன்மை, மின்னணுமயமாக்கம் மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளன.
உயிரியல் பூங்காக்களின் சிறப்பம்சங்கள்
வண்டலூர் - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 180 கிலோவாட் (KW) சூரிய சக்தி மின் நிலையம் நிறுவப்பட்டு, பறவைகள் சரணாலயம் மற்றும் இரவு நேர விலங்குகள் இல்லம் புதுப்பிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்வு தளங்கள் (ramps), வழுக்காத ஓடுகள் (anti-skid tiles) அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நுழைவுச்சீட்டு விற்பனை UPI, இணையவழி மற்றும் Whatsapp வழியாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பேட்டரி மூலம் இயங்கும் புதிய வாகனங்கள் பூங்காவிற்குள் போக்குவரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கிண்டி - சிறுவர் இயற்கைப் பூங்காவில், 20 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பூங்கா மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, சீரமைக்கப்பட்ட உணவு விடுதி, ஓலை வேய்ந்த கூரையுடன் கூடிய விலங்குகள் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு, பாதைகளும் சீரமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் மிகப்பெரிய வேடந்தாங்கல் பறவைக்கூடமும் (20 மீட்டர் உயரம்) அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய சிறுவர் நூலகம், செல்ஃபி பாய்ன்ட், மின்னணுமூலம் நுழைவுச்சீட்டு வசதி மற்றும் பார்வையாளர் வசதிகள் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், மேம்படுத்தப்பட்ட பல்நோக்கு விளக்கம் அளிக்கும் மையம் (interpretation centre), குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் மான் இருப்பிடங்கள், சிசிடிவி கேமராக்கள், பலப்படுத்தப்பட்ட எல்லை வேலி, மேம்படுத்தப்பட்ட பார்வையாளர் வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேலூர் - அமிர்தி உயிரியல் பூங்கா, சக்கர நாற்காலிகள், உணவக வசதிகள், வாகன நிறுத்துமிடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கழிவறைகள் போன்ற வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், குரும்பப்பட்டி மற்றும் அமிர்தி உயிரியல் பூங்காக்களில் விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் பொது வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி - சிறுவர் இயற்கைப் பூங்கா, சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் - அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய பூங்காங்களின் மேம்பாட்டிற்காக 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கினார்.
இக்கூட்டத்தில், உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் தரத்தை உயர்த்திடவும், விலங்குகளின் நலனை உறுதி செய்திடவும், பொதுமக்களிடம் வன விலங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
Also Read
-
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சென்னை மெரினா நீச்சல் குளம் : புதிய அம்சங்கள் என்ன ?
-
“AeroDefCon 2025” - மூன்று நாள் சர்வதேச மாநாடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும்... அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு !
-
“புதிய காலத்தின் தொடக்கம்!” : AeroDefCon - 2025 சர்வதேச மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!