Tamilnadu
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கோதண்டம் என அறியப்படும் கொட்டுமுக்கல மாடசாமிராஜா கோதண்டம் என்பவர் ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர் ஆவார். புதினம், சிறுகதை, நாடகம், உரை, கவிதை, கட்டுரை, ஆய்வு, மருத்துவம், தொகுப்பு ஆகிய துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம், உருசியம், செருமனியம், மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன .
சிவசைலம் முதல் ஏற்காடு, கொடைக்கானல் மலைகளில், அடர்வனங்களில், மலைவாழ் மக்கள் குடிசைகளில், அவர்களுடன் குகைகளில், ஆற்றங்கரைகளில் தங்கி பல நாட்கள் வனங்களில் சுற்றி தாவரங்கள், அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள், பற்றி ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக நூல்கள் எழுதினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் 'ஆரண்ய காண்டம்' குடியரசு தலைவர் விருது பெற்றது. பல நூற்றுக்கு மேற்பட்ட பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார். அதோடு தமிழக அரசு விருது, இலங்கை அரசு விருதுகளை பெற்ற இவருக்கு, 2007-ம் ஆண்டு மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் இவருக்கு 'கௌரவ டாக்டர் பட்டம்' அளித்து சிறப்பித்துள்ளது.
இவர் எழுதிய “காட்டுக்குள்ளே இசைவிழா” எனும் சிறுவர் நூலுக்கு 2012 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் கொ.மா.கோதண்டம் எழுதிய நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு, இவரின் மரபுரிமையாளர்களுக்கு ரூ.10 இலட்சம் 2025 ஏப்ரல் 5 அன்று வழங்கப்பட்டது.
இந்த நிலையில் முதுபெரும் எழுத்தாளர் குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் இன்று காலமானார். இவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :-
முதுபெரும் எழுத்தாளர் குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
எளிய குடும்பத்தில் பிறந்து பஞ்சாலைத் தொழிலாளராக தமது வாழ்வைத் தொடங்கிய கோதண்டம் அவர்கள், அதே எளிய மக்களுக்கான எழுத்தின் மூலமாக இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி. அதுமட்டுமின்றி சிறார்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் பெரும் பங்களிப்பைச் செய்து, இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
பால சாகித்திய விருது, குடியரசுத் தலைவர் விருது, தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவரது நூல்கள், கடந்த 2025 ஏப்ரல் 5 அன்று நமது திராவிட மாடல் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பதையும் நினைவுகூர்கிறேன்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் அவர்களின் மறைவு கலை, இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Also Read
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!