Tamilnadu

2026-ல் திமுகவின் வெற்றிக் கணக்கு இங்கிருந்து தொடங்குவோம் : முப்பெரும் விழா - செந்தில்பாலாஜி வரவேற்புரை!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் இம்மூன்றையும் இணைத்து தி.மு.க. முப்பெரும் விழாவாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் பெருவிழாவாக நடத்தி வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது அடியொற்றி கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. முப்பெரும் விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அந்தவகையில் திராவிட இயக்க வரலாற்றில் – தி.மு.க. வரலாற்றில் முப்பெரும் விழா தனிச்சிறப்புப் பெற்றதாகும். இம்முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்படும் விருதுகள் ஒவ்வொரு கழகத்தினருக்கும் தனது உழைப்புக்கு கிடைத்த விருதாகவே பெருமைகொள்வர்.அந்த வகையில் தி.மு.க. முப்பெரும் விழா 17.09.2025 அன்று கரூர் மாநகரில் நடைபெறும் என்று தலைமைக் கழகம் சார்பில் கழகத் தலைவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

இதன்படி இன்று கரூரில் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கழக உடன்பிறப்புகளின் உற்சாக வரவேற்பிற்கு இடையில், பிரம்மாண்டமாய் முப்பெரும் விழா திடலுக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைத் தந்தார்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட செயலாளர் வி.செந்தில் பாலாஜி வரவேற்பு உரையாற்றினார். அப்போது,”75 ஆண்டு கண்ட மாபெரும் இயக்கத்தின் முப்பெரும் விழாவை கரூரில் நடத்த அனுமதி கொடுத்த கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

2026-ல் உங்கள் வியூகம் தெரியாமல் எதிரிகள் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள். “2026ல் திமுக வெற்றிக் கணக்கை மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்குவோம்! எதிரிகள் யாராக இருந்தாலும், எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் நாம் தான் வெல்வோம்! நாம்ம மட்டும் தான் வெல்வோம்!வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு!”என செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார்.

Also Read: தி.மு.க முப்பெரும் விழா தொடங்கியது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!