Tamilnadu

வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு இன்று 386-வது பிறந்த நாள்!

தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை நகர் தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே வைத்திருக்கும் சென்னை மாநகராட்சி இன்று 386-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது. இன்றைய நவீன சென்னை, 385 ஆண்டுகளுக்கு முன்பு சென்னப்பட்டணம் என்பதில் இருந்து தொடங்கியது. மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிராக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர், தங்களுக்காக கோட்டை, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புக்காக வாங்கிய மணல் திட்டுதான், 1639ஆம் ஆண்டு இதே நாளில் சென்னப்பட்டணம் என்ற பெயரில் கையெழுத்தானது. அன்றைய தினத்தை அடையாளமாக வைத்து சென்னை தினம் கொண்டாடப்படுகிறது..

சீர்மிகு சென்னை.. சிங்காரச் சென்னை.. வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை என பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது .. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, தமிழ்நாட்டுக்கே தலைநகரமாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னையின் அடையாளங்களில் ஒன்று.

சென்னை தோன்றிய நாளில்தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் உருவானது. 1639ஆம் ஆண்டுதான் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான். கட்டிடக்கலை வரலாற்றில் இதுபோல் மீண்டும் ஒரு கோட்டையை கட்ட முடியுமா என்று வியக்கும் வகையிலும் அழகிலும் பிரம்மாண்டமாக இன்றும் காட்சியளிக்கிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டை.

சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகையும் கட்டிடக்கலை வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ளது. எந்த ஒரு அதிநவீன வசதிகள் இல்லாத போதே கருங்கட்களாலும் சுண்ணாம்பு கலவைகளாலும் கட்டப்பட்டு எவ்வளவு பெரிய இயற்கை இடர்பாடுகளையும் கடந்து சென்னையின் அடையாளமாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது ரிப்பன் மாளிகை.

இதைப்போலவே 1851 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகம். இங்கு சிற்பங்கள், சிற்பக்கலை, பாறை கல்வெட்டுகள், கலைப் பொருட்கள் என மெட்ராஸின் கலாச்சார செழுமையை தாங்கி நிற்கிறது.

சென்னை என்றால், நம் நினைவுக்கு வருவது சென்ட்ரல் ரயில் நிலையம் தான். ஆனால் கிபி 1856 ஆம் ஆண்டு, முதன் முதலில் மெட்ராஸ் மாகாணத்தில் ராயபுரத்தில்தான் ரயில்நிலையம் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் ரயில் அப்போதைய ஆற்காடு நவாபின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது. அதன் பிறகே சென்ட்ரல் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. இன்று பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பேர் பயணம் செய்யும் ரயில் நிலையமாக நூறு ஆண்டுகள் கடந்தும் பழமை மாறாமல் அதே கம்பீரத்தோடு சென்னையின் அடையாளமாக சென்ட்ரல் ரயில் நிலையம் விளங்கி வருகிறது.

இதேபோல், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதிமன்றம். ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னையில் ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், இராயபுரம் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்டான்லி மருத்துவமனை என பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை உருவாக்கினாலும், பல்லவர் காலத்திலேயே இன்றைய மயிலாப்பூர், ஒரு துறைமுக நகரமாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

பழைய மெட்ராசில் இன்னொரு அடையாளமாக விளங்குவது மெரினா கடற்கரை. ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் கால் நனைக்காத இந்தியர்கள் இல்லை என்றே சொல்லலாம். அப்படி பெருமை பெற்ற மெரினா கடற்கரையில் மணி மகுடமாக விளங்குவது கலங்கரை விளக்கம். கடற்கரை நகரமாக இருந்த பழைய மெட்ராஸ் மாகாணத்தில் வர்த்தகம் கடல்சார் பயணம் மீன்பிடி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தது இந்த மெரினா கடற்கரை. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையையும் கலங்கரை விளக்கின் அழகையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

கிராமங்களில் இருந்து மெட்ராஸிற்கு வேலை செய்வதற்காக வந்தாலும் பெரும்பாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தவர்களை அதிகம். அப்படி மெட்ராஸில் அடையாளமாக விளங்கியது ஏவிஎம் ஸ்டுடியோ. அன்றைய நடிகர்கள் முதல் இன்றைய நடிகர்கள் வரை இந்த ஏவிஎம் ஸ்டுடியோவில் கால் பதிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. சிவாஜி எம்ஜிஆர் ரஜினிகாந்த் கமலஹாசன் இப்படி பல்வேறு உச்ச நடிகர்களை உருவாக்கிய இடம் தான் இந்த ஏவிஎம் ஸ்டுடியோ.

ஆங்கிலேயர்கள் சென்னை நகரை உருவாக்கினாலும், சுதந்திரத்திற்கு பிறகு சென்னையை நவீன சென்னையாக கட்டமைத்ததில் திராவிட இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மெட்ராசை, சென்னை என பெயர் மாற்றி அதன் கட்டமைப்பை செதுக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் ... சிங்கார சென்னை, சிங்கார சென்னை 2.ஓ திட்டங்களின் மூலமாக சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னையை உருவாக்கி வருகிறது திமுக அரசு..

மெட்ரோ ரயில்கள் - அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைநயம் மிக்க வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா மேம்பாலம்,

செம்மொழிப் பூங்கா - மெரினா கடற்கரை என இன்றைய சென்னையின் வளர்ச்சி அபரிதமானது.

பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் சென்னை, தமிழ்நாட்டின் அன்னையாகவும் தலைநகரமாகவும் மட்டுமல்லாமல் கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் திகழ்கிறது. இந்தியாவிலேயே பழமையான முதன்மையான மாநகராட்சி என்கிற கம்பீரத்தோடு, உலகின் 31-வது பெரிய நகரம், இந்தியாவின் 4-வது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றது சென்னை மாநகரம்.. ஆண்டாண்டு காலமாக வாழ்வு தேடி வருபவர்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வாழ்வளித்து வருகிறது, வந்தாரை வாழ வைக்கும் சென்னை....

சென்னையை... கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா?

ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியாகவும், பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமமாகவும் திகழ்கிறது சென்னை...

Also Read: "வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் உத்தரவு !