Tamilnadu

மும்முரமாக நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாயட்ஸ் காலனியில் உள்ள ஐ.டி.ஐ. கல்லூரியில் நடைபெற்ற முகாமினை நேரில் பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்.

பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களின் கீழ் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று, விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்து தங்கள் விண்ணப்பத்தினை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 109 முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன.

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120 வி.பி.ராமன் சாலை, லாயட்ஸ் காலனியில் உள்ள ஐ.டி.ஐ. கல்லூரியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு;

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்பமும் வழங்கப்பட்டது.

முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120 வி.பி.ராமன் சாலை, லாயட்ஸ் காலனியில் உள்ள ஐ.டி.ஐ. கல்லூரியில் இன்று (7.8.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் இடம்பெற்ற ஒவ்வொரு அரசு துறை பகுதிக்கும் நேரில் பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்.

Also Read: ”நாட்டு மக்களின் வாக்குகள் திருடப்படுகின்றன” : தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!