Tamilnadu

IIT கல்வி வளாகங்களில் சாதிய வன்முறை : ஒன்றிய அரசுக்கு கனிமொழி MP சரமாரி கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில் மேற்கு வங்கம் காரக்பூர் ஐஐடியில் கடந்த ஏழு மாதங்களில் நான்கு மாணவர்கள் இறந்துள்ளதற்கு வருத்தம் தெரிவித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் உயர் கல்வி வளாகங்களில் தொடர்ந்து சாதிய வன்முறையால் மாணவர்கள் இறப்பது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

அதில்,உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பல்கலைகழகங்களில் அமைக்கப்படும் சம வாய்ப்பு பிரிவுகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள், 2012இன் படி அமைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன? அவை இன்னும் முழுமையாக அமைக்கபடாததற்கான காரணங்கள் என்ன?

கல்லூரி/பல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களின் விவரங்கள், கல்லூரி வாரியாக/பல்கலைக்கழக வாரியாக வெளியிட வேண்டும்.பாகுபாட்டை எதிர்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளின் விவரங்கள் என்ன? சாதி அடிப்படையிலான பாகுபாட்டால் எழும் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் வகுத்துள்ள கூடுதல் வழிமுறைகள் என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரி கல்லூரிகள்

கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் 374 மாதிரி கல்லூரிகளை உருவாக்குவதாக ஒன்றிய அரசு முன்மொழிந்திருந்ததை சுட்டிக்காட்டி அதன் தற்போதைய நிலை என்ன என்று கள்ளக்குறிச்சி திமுக மக்களவை உறுப்பினர் டி. மலையரசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களை கண்டறியும் வரையறைகள் என்ன? இதுவரை தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள அத்தகைய மாவட்டங்கள் எத்தனை? இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு? கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட தேவைப்படும் கால அவகாசம் என்ன? இக்கல்லூரிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? போன்ற பல்வேறு விவரங்களையும் அவர் கோரியுள்ளார்.

Also Read: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மோசடி... சு.வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சரின் பதில் என்ன?