Tamilnadu

“நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள் - ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டப்பட்ட நாள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழர்களின் நிலப்பரப்பிற்கு ‘தமிழ்நாடு’ என பேரறிஞர் அண்ணாவால், 1967ஆம் ஆண்டு பெயர்சூட்டப்பட்ட நாள் ஜூலை 18. இந்நாளை ‘தமிழ்நாடு நாள்’-ஆக அறிவித்து கொண்டாடி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டின் தமிழ்நாடு நாள் விழா, சென்னை, திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் அரங்கம், முத்தமிழ்ப் பேரவை மன்றத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணை வழங்கப்பட இருக்கிறது. மேலும், பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

பேரறிஞர் அண்ணா

இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!

ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.

தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.

அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான்” என பதிவிட்டுள்ளார்.

Also Read: வாக்காளர் பட்டியலை சீரமைப்பது போல் பீகாரில் வெற்றியைப் பறிக்க பாஜக முயற்சி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு!