Tamilnadu

845 அரசு காலிப் பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு! : எப்போது விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர். வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 845 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025-ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு இன்று (15.07.2025) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் 15.07.2025 முதல் 13.08.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.

தொடர்ச்சியாக 13-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு தொகுதி IIA பணிகளின் தேர்வுத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 11 மற்றும் IIA பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தோராயமானதாகும். மேலும் அரசுத்துறை / நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Also Read: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!