Tamilnadu
அமித்ஷாவுடன் சந்திப்பு.. 3 மாநில போலீசுக்கு டேக்.. ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் அதிரடி கைது!
சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய்ப்பொடி வெங்கடேசன். பிரபல ரவுடியான இவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என பல்வேறு மாநிலங்களில் செம்மரம் கடத்தல், அதிகாரிகள் மீது தாக்குதல், கொலை மிரட்டல், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் செம்மரக் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஆந்திரா போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தற்போது ஆந்திராவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
இதனிடையே பாஜகவில் இணைந்த ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசனுக்கு, பாஜக OBC (பிற்படுத்தப்பட்டோர்) அணி மாநில செயலாளர் பதவி வழங்கியது அப்போதைய பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தலைமை. இவர் பாஜகவில் சேர்ந்த உடனேயே கட்சி நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் கடந்த 7-ம் தேதி மதுரை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள் போட்டி போட்டு விருப்பம் தெரிவித்த சூழலில், முக்கிய நிர்வாகிகள் ஆதரவுடன் அமித்ஷாவை வரவேற்க நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் மிளகாய்ப்பொடி வெங்கடேசனும் இடம்பெற்றார்.
அமித்ஷாவுக்கு பொன்னாடை போர்த்தி ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் வரவேற்றது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஒரு ரவுடி ஒன்றிய அமைச்சரை வரவேற்றது பலர் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்த சூழலில் தான் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன், அதில் ஆவடி காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலங்கானா காவல்துறை என அனைவரையும் டேக் செய்திருந்தார்.
இப்படியாக அட்ராசிட்டி செய்த ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசனை இன்று (ஜூன் 13) சென்னை செங்குன்றம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசனிடம் செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!