Tamilnadu

சென்னையில் “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025” தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, தீவுத்திடலில் இன்று (30.5.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் இன்று 30.5.2025 முதல் 1.6.2025 வரை மூன்று நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு மீன் உணவு திருவிழாவை திறந்து வைத்து பார்வையிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீனவர்களின் முன்னேற்றத்திற்காக திருவெற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் மீன் அங்காடி, சிந்தாதிரிப்பேட்டை புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடி உள்பட பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீன் அங்காடிகள் அமைத்தல், மீன் இறங்கு தளங்கள், கூடுதல் படகு அணையும் தளம், படகு பழுதுபார்க்கும் தளம், அலை தடுப்புச் சுவர் அமைத்தல், தூண்டில் வளைவு அமைத்தல் என ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் மீன் உணவு வகைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு மீன் உணவு திருவிழா – 2025 நடத்த உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி, தமிழ்நாடு மீன் உணவு திருவிழாவையொட்டி சென்னை தீவுத்திடலில் 1,00,000 சதுர அடி பரப்பளவுள்ள குளிரூட்டப்பட்ட அரங்கம் அமைக்கப்பட்டு 50 அரங்கங்கள் கொண்ட சென்னை கடல்மீன் உணவு காட்சி கூடாரம், 15 அரங்கங்களுடனான மீன்வளம் மற்றும் வண்ணமீன்கள் காட்சிக்கூடாரம், 20 அரங்கங்களுடனான மீன் உணவு கூடங்கள், செயல்விளக்க கூட்ட அரங்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உணவுத் திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், சமயற்கலை மாணவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு சமையல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. கடல்மீன்கள், குறிப்பாக இறால் மீன்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியமான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

கடல்மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஐயோடின், தாதுக்கள், விட்டமின்கள் A, D, K உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

Also Read: மருத்துவக் கல்வி ஆசையை கைவிட சொல்கிறாரா நடிகர் விஜய்? : மாநில அளவில் விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!