Tamilnadu

”தி.மு.க அரசுக்கு கிடைத்த வெற்றி” : பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற ஆர்.எஸ்.பாரதி!

கோவை பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அதிமுக மாணவரணி சேர்ந்த அருளானந்தம், ஹிரண்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை போலிஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் சாட்சிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கொடூர வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் வரவேற்று வருகின்றனர்.

தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,”சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதுதான் பொள்ளாச்சி கொடூர சம்பவம் நடந்தது. தி.மு.க பல போராட்டங்களை நடத்திய பிறகுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏன் பொள்ளாட்சியிலேயே கனிமொழி எம்.பி தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த வழக்கை கண்ணும் கருத்தோடு நடத்தி குற்றவாளிகளுக்கு இப்போது தண்டனை பெற்று தந்துள்ளது. இந்த தீர்ப்பு தி.மு.க அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என தெரிவித்துள்ளார்.

Also Read: பொள்ளாட்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளிகள் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!