Tamilnadu

”நாடு கடத்துவது மனிதாபிமானமற்ற செயல்” : ஒன்றிய அரசின் முடிவுக்கு மெகபூபா முப்தி கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இந்த தாக்குதல் நடந்த அடுத்த நாளே இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் நாட்டைவிட்ட வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானியர்களையும் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறுகிய விசாவில் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களையும், அவர்களது நாட்டிற்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்றுடன் அவர்களது விசா காலம் முடிவடைகிறது. இதை புதுப்பிக்க முடியாது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வரும் நபர்களை நாடு கடத்துவது மனிதாபிமானமற்ற செயல் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஒன்றிய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "”பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் முடிவு கவலைகளை எழுப்பியுள்ளது. இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து நீண்ட காலமாக நமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றனர். இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வரும் நபர்களை நாடு கடத்துவது மனிதாபிமானமற்ற செயல். இந்த முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” தெரிவித்துள்ளார்.

Also Read: ”மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகள் இல்லை” : சட்டப்பேரவையில் நா தழுதழுக்க பேசிய உமர் அப்துல்லா!