Tamilnadu

‘நமக்கு நாமே’ திட்டத்திற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு! : சட்டப்பேரவையில், அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 1) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

விவாதம் நடைபெறுவதற்கு முன்னதான, வினா - விடை நேரத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் இருக்கிற ஏரிகளை தூர்வாரவும், ஒழுங்குபடுத்தவும் தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், முதற்கட்ட பணிகளும், திட்ட மதிப்பீடுகளும், தேவைக்கேற்ப முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

‘நமக்கு நாமே’ திட்டத்திற்காக, நடப்பாண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதன்படி, நகர்புற நீர்நிலைகளை சுத்திகரிக்கவும், நீர்நிலைகளை சுற்றி நடைபாதைகளை அமைக்கவும் வழிவகை செய்யப்படும்.

மேலும், தொகுதி நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களும் துறைக்கு உதவினால், திட்டங்கள் வெகுவாகவும், நிதி பற்றாக்குறை ஏற்படாத வகையிலும் செய்துத்தரப்படும்” என தெரிவித்தார்.

Also Read: தமிழ்நாடு முழுவதும் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள்! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!