Tamilnadu
”வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ள மு.க.ஸ்டாலின்” : முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு!
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சி பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,“தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும். மேலும் தெளிவுபடுத்த வேண்டியது கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது.
தென்மாநிலங்களின் தொகுதி குறைப்பு பா.ஜ.கவின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும். ஏற்கனவே நம் கலாச்சாரத்திலும், நம் மொழிக் கொள்கையிலும் தலையிடும் ஒன்றிய பா.ஜ.க தற்போது நம் பிரதிநிதித்துவத்திலும் தலையிடுகிறது. இது அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டிய மிக முக்கியமான ஆபத்து. இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,"ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துக்கொண்டு, பா.ஜ.க நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்டிருக்கும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து, கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்,"மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்பது பொறுப்புணர்வுடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அவ்வகையில், ஜனநாயக பிரதித்துவத்தையும், மக்கள் தொகையை பொறுப்புடன் கட்டுப்படுத்திய மாநிலங்களின் உரிமைகளையும் நிலைநிறுத்தும் முக்கியமான கூட்டம் இது." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!